அரசியல் கட்சியினர் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேச வேண்டும்... பொன்.ராதா வேண்டுகோள்!
அனிதா மரணம் தாங்க முடியாத மன வருத்தைத்தை தந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை : அனிதாவின் மரணம் தாங்க முடியாத மனவருத்தத்தை தந்துள்ளதாகவும், அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில் கூறியுள்ளதாவது : கடந்த ஆண்டு நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வான +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அன்புக் குழந்தை செல்வி. அனிதாவின் மரணம் தாங்க இயலா மன வருத்தத்தை தந்துள்ளது. பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த செல்வி. அனிதாவின் எதிர் கால வளர்ச்சியே தங்கள் வாழ்வென கருதி வளர்த்து படிக்க வைத்த பெற்றோரின் நிலையை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.

ஈடு செய்ய இயலாத இந்த அன்புக் குழந்தையின் மறைவிற்கு எனது ஆழ்மனதின் அஞ்சலியை செலுத்துகிறேன். அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கு மன அமைதி கிட்ட இறைவனை இறைஞ்சுகிறேன். நம் நாட்டின் எதிர்காலமாக திகழும் குழந்தை செல்வங்கள் மனதில் துணிவுடன் எதிர்காலத்தை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நல வாழ்வே நாட்டின் நலன் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மனவேதனை அடைந்து நிற்கும் மாணவச் செல்வங்களுக்கு மன அமைதியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் வார்த்தைகளை தவிர்த்து மனத் தளர்வும், நம்பிக்கையின்மையும் ஏற்படும் வகையில் பேசுவதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்கிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications