அரசியல் ரீதியாக திமுகவையும் பாஜக ஆட்டுவிக்கும்.. பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி பேட்டி!
அரசியல் ரீதியாக திமுகவையும் பாஜக ஆட்டுவிக்கும் என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை : சிறை மற்றும் அபராதத்தை இலங்கை கையில் எடுத்தால் நாமும் இலங்கை மீனவர்களை அதே போல தண்டிக்க வேண்டியிருக்கும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா குறித்து மக்களுக்கு தொடர்ந்து சந்தேகம் ஏற்படுவது அரசிற்கு நல்லதல்ல. மிகவும் மதிக்கத்தக்க ஒரு இடம் சந்தேகத்திற்கு இடமான இடமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது. இதனால் இந்த சந்தேகத்தை நீக்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது என்றார்.
திமுக ருத்ராட்ச பூனை போல தமிழ்நாட்டில் அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை, திமுக, காங்கிரஸ் இதற்கு முன்பு என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதால் அனைத்து கட்சிகளின் இலக்காக பாஜக மாறியுள்ளது.அரசியல் ரீதியாக திமுகவையும் பாஜக ஆட்டுவிக்கும், ஆட்சி ரீதியாக அல்ல என்றும் அவர் கூறினார்.
எல்லைத் தாண்டி வரும் மீனவர்கள் மீது சிறை அபராதத்தை விதிக்க இலங்கை முடிவு செய்தால் நாமும் இலங்கை மீனவர்களை அதே போல தண்டிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். நட்பு வளர வளர எல்லைப் பிரச்னைகள் தீரும் என்றும் இந்தியா எந்த நாட்டிற்கும் அடிபணியாது என்றும் அவர் தெரிவத்துள்ளார்.