பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்தது வரவேற்கத்தக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்
பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சியின் குஷ்பு ஆதரிப்பதை வரவேற்பதாக பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் இன்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது: காவிரி பிரச்சனை கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது. இரண்டு அல்லது நான்கு மாதத்தில் முடியக்கூடிய பிரச்சனை இல்லை. கர்நாடகாவில் ஆட்சி கலைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் எப்போது தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் வீழ்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை பொறுத்தவரை பாஜக புதிய பார்முலாவை எடுத்துச் செல்லும். திருமங்கலம் பார்முலாவுக்கு மாற்றாக புதிய பார்முலாவை பாஜக எடுத்துச் செல்லும். பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்து பேசுவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக குஷ்பு பொதுசிவில் சட்டத்தை ஆதரிப்பது நல்ல விஷயமே. இதை அனைவருமே வரவேற்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.