பொங்கல் கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள்: சென்னை ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்வதால் சென்னை ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு,கரூர், உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்குச் ல்லும் மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் முதலே குவிந்தனர்.
பொங்கலுக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வோர், ரயில் பயணத்தையே பாதுகாப்பாக உணர்வதால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும் போதுமான ரயில்கள் இல்லாத நிலையில், நேற்று, பொங்கலுக்கான, 'தத்கல்' டிக்கெட் விற்பனை, நான்கு நிமிடங்களில் முடிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.
அதிகரித்த கூட்டம்
எனினும் சொந்த ஊர் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் ரிசர்வேசன் இல்லாத பெட்டிகளில் செல்ல வரிசையில் காந்திருந்தனர். கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று உடனே காத்திருந்த அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு இடம்பிடிக்க ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தட்கல் டிக்கெட்
எழும்பூர், சென்ட்ரல் நிலைய முன்பதிவு மையம் உட்பட, சென்னையில் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களிலும், 'தத்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய, நேற்று அதிகாலை, 2:00 மணியில் இருந்தே, வரிசையில் மக்கள் காத்திருந்தனர். காலை, 10:00 மணிக்கு, கவுன்ட்டர் திறந்ததும், நான்கு நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் முன்பதிவு; 30 நிமிடங்களில், 'ஏசி' மூன்றடுக்கு, 'ஏசி' இரண்டடுக்கு பெட்டி முன்பதிவு; ஒரு மணி நேரத்தில், 'ஏசி' முதல் வகுப்பு முன்பதிவு முடிந்தது. இதனால், ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் அடைந்தனர்.
சிறப்பு ரயில்கள் இல்லை
ஓணம் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டதைப் போல பொங்கல் பண்டிகைக்கு அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் விடப்படவில்லை. இதனால்தான் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பகல் நேர சிறப்பு ரயில் தேவை
12, 13ல், பகல் நேர சிறப்பு ரயில் இயக்க வேண்டும்' என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டம் அலை மோதும்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, இன்று புறப்படும் ரயில்களில், முன்பதிவு முடிந்து விட்டது. ஒவ்வொரு ரயிலிலும், படுக்கை வசதிக்கு காத்திருப்போர் பட்டியலில், 250 பேர் உள்ளனர். எனவே, ரயில் நிலையத்தில் இன்றும், நாளையும் கூட்டம் அலை மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.