பொங்கல் வருகுது! மங்கலம் பொங்குது!! மகிழ்ச்சி பெருகுது!!!
இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள். "வங்கக்கடல் கடைந்த மாதவனை" என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குறிய நாள். தக்ஷினாயனம் எனும் தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள்.
சென்னை: பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை போக்கி என்றார்கள். அந்த சொல்லே நாளடைவில் மருவி 'போகி' என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்த பண்டிகையின் தத்துவம்.
சரி! ஜோதிடத்தில் இந்த போகியின் நாயகன் யாரென்று தெரியுமா?சுக்கிரபகவானேதான்! அட என்னப்பா. எதெற்கெடுத்தாலும் சுக்கிரன் தானா? நாங்கள் நம்பமாட்டோம் என்பவர்களுக்கு எப்படி சுக்கிரன் காரணம் என்பதை ஆராய்ந்து எழுதியுள்ளார் ஜோதிடர் பேராசிரியர் அஸ்ட்ரோ சுந்தரராஜன்.
"புதிய" என்ற வார்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்சி,புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய என தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆக போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையை குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குறிய தினம்தானே! அதிலும் சுக்கிர வாரத்திலேயே அமைந்தது சிறப்பு தானே!
இந்த போகி உருவானதற்கு காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அதன்படி, தேவர்கள் தலைவன் இந்திரனுக்கும் போகி என்று பெயர் உண்டு. அவன் அருளால் மழை பெய்து பயிர் விளைந்ததை குறிக்கும் வகையில் பண்டைய தமிழகத்தில் இந்திரனுக்கு உரிய விழாவாக போகி கொண்டாடினர். ஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின்மீது 7 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான்.
தனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையை குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.
போகிப் பண்டிகை
போக வாழ்வை அருளும் கிரகமும் சுக்கிரன்தான். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலட்சுமியின் அம்சமான இந்திரானி என கூறப்படுகிறது. இந்திரானி ௭ன்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திரானிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழா என்பது சரிதானே!
தை திருநாள்
போகிக்கு மறுநாளான தை முதல் தேதி பொங்கல் திருநாள். அன்று, புதுப்பானையில் புது அரிசியில் பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம். அப்போது மஞ்சள், கரும்பு, நெல், வாழை... என்று, வயலில் விளைந்தவற்றை எல்லாம் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கல் வைத்து, பொங்கி வந்த பொங்கலை தலை வாழை இலையில் இட்டு, முதலில் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.
தை பொங்கல்
பொங்கலன்றும் பாருங்கள். புதிய பானை, புதிய அரிசி ஆக எல்லாம் சுக்கிர மயம்தான். மண்ணின் அதிபதி சனி. அது பானையாகி உருப்பெற்றால் அதன் காரகன் சுக்கிரன். செந்நெல்லின் அதிபதி சந்திரன். அது விளைய காரணம் சுக்கிரன். மஞ்சளுக்கும் இனிய செங்கரும்பிற்க்கும் அதிபதி குரு. அது விளைய காரணம் சுக்கிரன். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கவும் பானையில் பொங்கல் பொங்கவும் காரணன் சுக்கிர பகவான் தாங்க. பொங்கல் பொங்கும்போது இடும் குலவை சத்தம் என்னும் இசைக்கும் காரகன் சுக்கிரனே.
மாட்டுப்பொங்கல்
பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். உழவு தொழில் சிறப்பாக நடைபெற மனிதனுக்கு உதவியாக இருப்பவை மாடுகள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு இந்த நாளில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதோடு, பசுவையும், அதன் கன்றுவையும் நீராட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றின் கொம்பிலும், கழுத்திலும் சலங்கை, மாலைகள் அணிவித்து அலங்கரித்து பூஜை செய்வார்கள். சுவைமிகு பொங்கலும் உண்ணக் கொடுப்பார்கள்.
பசுவின் பால்
பசுவை ஸ்ரீமகாலட்சுமியின் அம்சம் என்போம். ஆக பால் தரும் பசுவும் சுக்கிரனின் அம்சமே. அனைத்து கால்நடைகளும் சுக்கிர அம்சமே. விவசாயத்தின் காரகனும் சுக்கிரனே. விவசாயத்திற்க்கு தேவையான மழையின் காரகனும் சுக்கிரனே. பண்டைய தமிழர்கள் மாட்டை செல்வமாக கருதினார்கள். மாடு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் அவர்கள் மாட்டை ‘ஆ நிரை' என்றும் அழைத்தார்கள். செல்வத்தின் காரகனும் சுக்கிரனேதான்.
காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். இது உறவினர்களையும், நண்பர்களையும் காணும் நாளாகும். இந்த நாளில் சுற்றுலா செல்வது விருப்பமானதாக மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள வர்கள் கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளுக்கோ, அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வயல்வெளிகளுக்கோ குடும்பத்தோடு சென்று மகிழ்கிறார்கள்.
சுக்கிரனின் அருள்
நட்பினை வளர்ப்பவரும் சுக்கிரன்தான். மகிழ்ச்சியை பெருக்குபவரும் சுக்கிரனேதான். ஆக எப்படி பார்தாலும் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும் பொங்கல் என அனைத்தும் சுக்கிரனின் அருள் பெற ஏற்ற தினங்களாகவே அமைகிறது. அதை அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.