இலவச பொங்கல் பை கொடுக்கலையே? நிதி நெருக்கடியா? சோகமா?
சென்னை: இந்த ஆண்டு தமிழக மக்கள் இலவச பொங்கல் பை இல்லாமலேயே பொங்கல் பண்டிகையை ஜாம் ஜாம் என்று உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு ஏன் கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கவும் இல்லை, விலையில்லா பொங்கல் பை கிடையாது என்று அரசும் எந்த வித விளக்கமளிக்கவில்லை.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ரூபாயும் பொங்கல் வைப்பதற்கான பச்சரிசி வெல்லம் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய பை ஒன்றையும் அரசு சார்பில் தருவார்கள். கடந்த ஆண்டு ஜெயலலிதா இதனை வழங்கினார். ஆனால் இந்தப் பொங்கலுக்கு அது வழங்கப்படவில்லை. ஆனாலும் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் தமிழக மக்கள்.
இலவச பொருட்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பண்டிகை நாட்களில் வழக்கமான உற்சாகம் இருக்கும் என்பதை நிரூபித்துள்ளனர் தமிழக மக்கள்.
இலவச பொங்கல் பை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகளுக்கு இலவச பொங்கல் பை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி 10 கிராம், திராட்சை 5 கிராம், ஏலம் 5 கிராம் என சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் அனைத்து பொருட்கள் அடங்கிய ‘பொங்கல் பை' இலவசமாக பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.
அதிமுக அரசு
அதிமுக அரசு கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டு, பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்கான இதர பொருட்கள் வாங்குவதற்காக 100 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.
நிதி நெருக்கடி
தமிழக அரசு கடந்த ஆண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் 100 ரூபாய் வழங்கியது. அதேபோல இந்த ஆண்டும் கிடைக்கும் என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு இலவச பொங்கல் பை வழங்கப்படவில்லை.அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாகவே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா
2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, ஜனவரி 4ம் தேதி திட்டத்தை தொடங்கியும் வைத்தார். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
நிதி நெருக்கடியா?
1.84 கோடி ரேசன் கார்டு உபயோகிப்பாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க குறைந்தது 300 கோடி ரூபாய் செலவாகும். இதற்கான நிதியை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. 2013ஆம் ஆண்டு பொங்கல் பரிசு, விலையில்லா பொருட்களுக்காக ரூ.280 கோடியும், 2013ஆம் ஆண்டு ரூ.300 கோடியும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மன நெருக்கடியா?
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்ததால், இந்தாண்டு அதிமுகவினருக்கு சோக பொங்கலாகிவிட்டது. எனவேதான சிறப்பு பொங்கல் பரிசு வழங்க மேலிடம் உத்தரவு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதல்வரானால் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை மற்றும் பொதுத்தேர்தலை மனதில் வைத்து இரட்டிப்பான பரிசு கொடுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.