மதுரை மேடையில் பொன்னியின் செல்வன்.. ரசிகர்கள் அமோக வரவேற்பு..
மதுரை: மதுரையில் நடைபெறும் பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று நாவல் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துபோயுள்ளன.
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று புதினமாக, 1950களில் வெளியானது 'பொன்னியின் செல்வன்' நாவல். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த புத்தகம், தமிழகத்தின் அனைத்து புத்தக கண்காட்சிகளிலும் அதிகப்படியாக விற்பனையாகும் வரலாற்று நாவலாக சாதனை படைத்து வருகிறது.
வீரம், காதல், நகைச்சுவை, அன்பு, அறிவு, அரசியல், திடுக்கிடும் திருப்பங்கள் என வாசகர்களை கட்டிப்போடும் அத்தனை அம்சங்களும், உண்மையான வரலாற்று செய்திகளுடன், இணைந்துள்ளதால், புத்தகத்தின் மீதான ஈர்ப்பு தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நாவலின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்ட கமலஹாசன் இதை திரைப்படமாக எடுக்க விளைந்ததாகவும், ஆனால், பட்ஜெட் கருதி அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் பிரமாண்டமான இந்த நாவலை திரைப்படமாகவோ அல்லது மேடை நாடகமாகவோ எடுக்க பட்ஜெட் பெரும் பிரச்சினையாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு வீணாகிவந்தது. இந்நிலையில், எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் தயாரிப்பில் மதுரை கே.கே.நகர், லட்சுமி சுந்தரம் ஹாலில் இன்று முதல் மூன்று நாட்கள் மேடையில் பொன்னியின் செல்வன் நாடகம் காண்பிக்கப்படுகிறது.
இன்று ஸ்பான்சர்களுக்காக நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும், நாளையும், அதற்கு மறுநாளும் பொதுமக்கள் பார்வைக்கு நாடகம் திரையிடப்படும் என்றும் மண்டப நிர்வாகிகள் தெரிவித்தனர். மொத்தம் 786 இருக்கை கொண்ட இந்த மண்டபத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டனவாம். மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த நாடகம், மூன்றரை மணி நேரம் காண்பிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கோவையிலும் நாடகம் மேடையேற உள்ளது.
பொன்னியின் செல்வனுக்கு கிடைக்கும் வரவேற்புகள், தொலைக்காட்சி நெடுந்தொடர்களாக அதை தயாரிக்க பிறருக்கு ஊக்கம் கொடுக்கும் என்று நம்பலாம்.