கொரோனா காலத்திலும் தஞ்சாவூரில் தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா - ஆலோசனையை கேளுங்க
தஞ்சாவூரில் வசித்து வரும் 115 வயதான மிட்டாய் தாத்தா முகமது அபுகாசிர் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அவரை மாநகராட்சி பணியாளர்கள் வெகுவாக பாராட்டினர்.
தஞ்சாவூர்: நல்லதையே நினைங்க... கவலைப்படாதீங்க...பீடி, சிகரெட் குடிக்காம இருந்தா 100 வயசுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் மிட்டாய் தாத்தா. கொரோனா தொற்றினால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் 115 வயதான மிட்டாய் தாத்தா ஆரோக்கியமாக வாழ்ந்து பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்.
தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அபுசாலி. பர்மாவில் வசித்து வந்த இவர், அங்கு நடந்த போரில் தனது குடும்பத்தினர் இறந்து விட்டதால் வேறு நாட்டிற்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தனது 50 வயதுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்தார்.
சென்னை வந்து சேர்ந்த அவர் சென்னையிலிருந்து நடந்து பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து நடைப்பயணமாகத் தஞ்சாவூருக்குச் சென்றார். தனது உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தஞ்சாவூரில் தனது உழைப்பை மட்டுமே நம்பி, குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்கத் தொடங்கினார்.

உழைப்பை நம்பி வாழும் தாத்தா
வீதி வீதியாக நடந்து சென்று அதனை வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி, வாழ்க்கையை நடத்தி வருகிறார். தள்ளாத இந்த வயதில் தனது சொந்த மூலதனத்தைக் கொண்டு யாரிடமும் கையேந்தாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் இவர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.

மிட்டாய் தாத்தா
இந்த வயதில் குறைந்த வருமானமே ஈட்டி வாடகை ஷெட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரை அப்பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிட்டாய் தாத்தா என்றே கூப்பிடுகின்றனர்.

தேங்காய் வியாபாரத்திற்கு மாறிய தாத்தா
கடந்த ஆண்டு வரை வீதி வீதியாக மிட்டாய் விற்று வந்த தாத்தா, கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளியே சென்று மிட்டாய் விற்காமல் வீட்டிலேயே தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

தஞ்சையில் கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்பு நடமாடும் வாகனம் மூலம் அங்கு கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

தாத்தாவின் தைரியம்
அப்போது, மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், பலரும் பயந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வராமல் தெரித்து ஓடினர். மிட்டாய் தாத்தா தைரியமாக போய் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் மிட்டாய் தாத்தாவைப் பாராட்டினர்.
தாத்தாவின் அறிவுரை
தனது ஆரோக்கியமான வாழ்க்கை குறித்து பேசிய மிட்டாய் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தாலே ஆரோக்கியமாக வாழலாம். பீடி, சிகரெட், மது குடிக்கக் கூடாது, ஆரோக்கியமான சத்தான உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் வராது என்கிறார். கவலைப்பட்டாலே 50 வயதுக்குள் ஆயுள் முடிந்துவிடும். கவலைப்படாமல் இருந்தாலே 100 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்றும் கூறுகிறார் அந்த 115 வயதான மிட்டாய் தாத்தா. இவரது ஆலோசனைகளை இன்றைய இளைய தலைமுறையினரும் பின்பற்றலாம்.












Click it and Unblock the Notifications