மழை நீர் முழுவதும் வடிந்த பின்னரே மின்சார சப்ளை: மின் வாரியம்
சென்னை: சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் எல்லா இடங்களிலும் மின்சார சப்ளை வழங்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையினால் சென்னையில், மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளநீர் புகுந்த துணை மின்நிலையங்களில் மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு, குறைந்த மற்றும் உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள 24,715 மின் வினியோக மின்மாற்றிகளில் 24,452 மின்மாற்றிகள் புனரமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்படுகிறது. 63,686 மின் வினியோக பெட்டிகளில் 63,172 மின் வினியோக பெட்டிகள் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களான சென்னை தொலைபேசி மற்றும் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளிலேயே மின் வினியோகம் வழங்கப்பட்டது. மழைநீர் தேங்கியுள்ள வீதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைந்து மழைநீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தேங்கி நிற்கும் மழைநீர் வெளியேற்றப்பட்டவுடன் எல்லா இடங்களிலும் மின்சாரம் வழங்கப்படும். மேற்படி சீரமைப்பு பணிகள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மற்றும் மின்சாதனங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.