ஒப்புக்கொண்ட ஊதியம் வழங்கவில்லை... விசைத்தறி தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பேச்சு வார்த்தையில் ஓப்புக் கொள்ளப்பட்ட ஊதியத்தை வழங்காததை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் துவங்கி விட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 5 ஆயிரம் நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கடந்த மாதம் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி பாளையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதமும், ஓப்பந்த தொழிலாளர்களுக்கு 19 சதவீதமும் கூலி உயர்வு வழங்க ஓப்பு கொள்ளப்பட்டது. இதையடுத்து மறுநாள் 28ம் தேதி வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
இருந்த போதும் பேச்சு வார்த்தையில் அறிவிக்கப்பட்ட 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்தும் உடனடியாக சம்பள உயர்வு வழங்க கோரியும் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.