தாது மணல் கொள்ளையில் தமிழக அரசின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு: பிரேமலதா
தூத்துக்குடி: கனிம கொள்ளையில் யார் ஈடுபட்டாலும், உடந்தையாக இருந்தாலும் எதிர்த்து போராடி தண்டனை பெற்று தர வேண்டும். இறைவன் கொடுத்த கனிம வளத்தை திருடுவதிலும், மக்களை கொல்வதும் ஒன்றுதான் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த தேமுதிக 9வது ஆண்டு துவக்க விழா பொது கூட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசியதாவது:
துரோகிகளை பற்றி தேமுதிகவுக்கு அச்சமில்லை. நமது நீர் நிலைகள் பராமரிக்கப்படாமல் தூர்த்து போய் கிடக்கின்றன. மக்களுக்கு எது தேவை என திட்டம் தெரியாத தலைவர்களே இதுவரை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகின்றனர். மக்கள் பணத்தில் தண்ணீர் பாட்டில் மூலம் அரசு இலவச விளம்பரம் செய்து வருகிறது.
தூத்துக்குடி வந்தது முதல் வைகுண்டராஜன், வைகுண்டராஜன் என்றே பேசுகிறார்கள். அவர் வஉசி பேரனா, கட்டபொம்மன் வரிசா, வாஞ்சிநாதன் பரம்பரையா, அல்லது சுதந்திர போராட்ட தியாகி குடும்பமா இதில் எதுவும் இல்லை.
கடவுள் கொடுத்த கனிம வளத்தை பாதுகாப்பது தாயை பாதுகாப்பதற்கு சமம். ஒரு பக்கம் மணல், ஒரு பக்கம் கிரானைட், ஒரு பக்கம் தாது மணல் மாபியாக்கள் பிடியில் தமிழகம் சிக்கி தவிக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் தாது மணலை அள்ளி கப்பலில் ஏற்றி அதனை பல லட்சம் கோடிக்கு மோசடி செய்தது இங்குள்ள மபியா கும்பல். இது போன்ற கனிம வள கொள்ளையை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.
தூத்துக்குடியில் சில மீனவ அமைப்புகள் மட்டும் போராடி வருகின்றன. அனைவரும் போராட வேண்டும். அவர்களுக்கு தேமுதிக துணை நிற்கும். கனிம கொள்ளையில் யார் ஈடுபட்டாலும், உடந்தையாக இருந்தாலும் எதிர்த்து போராடி தண்டனை பெற்று தர வேண்டும்.
இறைவன் கொடுத்த கனிம வளத்தை திருடுவதிலும், மக்களை கொல்வதும் ஒன்றுதான். தற்போது நடந்த ஆய்வு வேறும் கண்துடைப்புதான். தூத்துக்குடி மாவட்டத்தில் 15 சதவீதம், நெல்லை மாவட்டத்தில் 65 சதவீதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 சதவீதம் தாது மணல் கொள்ளை போய் உள்ளது.
தாது மணல் கொள்ளையை வெளிச்சதுக்கு கொண்டு வந்த ஆசிஷ்குமார், கிரானைட் கொள்ளையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சகாயம் போன்ற நல்ல கலெக்டர் அதிகம் வரவேண்டும். அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.
அரசு இனியும் இந்த விவகார்தில் கண்துடைப்பில் ஈடுபட வேண்டாம். உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். யார் சொன்னாலும் அப்படியே நம்பி விட கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.