இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி கைது
சென்னையில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி சத்யமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய புகாரில் சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி சத்யமூர்த்தியை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். திருமணம் செய்ய சத்யமூர்த்தி மறுத்ததால் மனமுடைந்த பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் கவுரி. வீட்டு வேலை செய்து வரும் இவருக்கு மோகன் என்ற மகனும் ஷீலா என்ற மகளும் உள்ளனர். ஷீலா எம்எஸ்சி படித்துவிட்டு யூபிஎஸ்சி தேர்விற்கு தயாராகி வருகிறார். அதற்காக தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வருகிறார்.

ஷீலா படித்து வந்த பயிற்சி மையத்தில் அவருடன் படித்து வந்த திருச்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஷீலாவும், சத்தியமூர்த்தியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சத்தியமூர்த்தி தற்போது வேலூர் சிறையில் நன்னடத்தை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
தன்னை திருமணம் செய்யும்படி சத்தியமூர்த்தியை ஷீலா வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த 19ம்தேதி வேலூர் காட்பாடியில் உள்ள முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் தாலி ஆகியவற்றை ஏற்பாடு செய்து வைத்திருந்தார் சத்தியமூர்த்தி.
19ம் தேதி தன்னை அழைத்து போக சத்தியமூர்த்தி வருவார் என ஷீலா காத்திருந்தார். ஆனால் சத்தியமூர்த்தி தனது பெற்றோருடன், ஷீலாவை சந்திக்க சைதாப்பேட்டையில் உள்ள ஷீலாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் ஷீலாவை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் தன்னை மறந்து விடும் படியும் கூறியதாக தெரிகிறது.
சத்தியமூர்த்தியும், ஷீலாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாதியை காரணம் காட்டி ஷீலாவை திருமணம் செய்து கொள்ள சத்தியமூர்த்தி குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதில் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஷீலா உடனுடம் தாய் கவுரியுடனும் சத்தியமூர்த்தியின் பெற்றோர் சண்டை போட்டனர். சிறிது நேரத்தில் சத்தியமூர்த்தி, ஷீலாவை சமாதானப்படுத்தி இன்னொரு பெண்ணுடன் தன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் எனவே பிரச்சனை செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஷீலா வீட்டிலிருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சத்தியமூர்த்தி ஷீலாவை சிகிச்சைக்காக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஷீலாவின் தாய் கவுரி குமரன் நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் தெரிந்ததும் சத்தியமூர்த்தி மருத்துவமனையில் இருந்து பெற்றோருடன் தப்பிக்க முயன்றார். ஷீலாவின் சகோதரர் சத்திய மூர்த்தியை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சத்திய மூர்த்தி திருமணத்துக்கு மறுத்ததால் ஷீலா தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து குமரன் நகர் போலீசார் சத்திய மூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷீலாவின் தாயார் கவுரி, 4 ஆண்டுகள் பெண்ணை காதலித்து விட்டு சாதியை கூறி பிரிக்கின்றனர். 4 லட்சம் பணம் தருவதாகவும், வேறு பையனை பார்த்து திருமணம் செய்து கொள்ளச் சொல்லி என்னை பெண்ணை மிரட்டினர் என்றும் சத்தியமூர்த்தி குடும்பத்தினர் மீது புகார் கூறினார்.












Click it and Unblock the Notifications