ரூ. 7 கோடி கட்டிடம் வாங்க எல்லா பெற்றோருக்கும் “பிரஷர்”- தனியார் பள்ளி மீது குவியும் புகார்கள்!
சேலம்: சேலத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் 7 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடத்தை வாங்குவதற்காக அப்பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவியரும் தலா 20 ஆயிரம் ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்ற உத்தரவால் பெற்றோர் விரக்தியடைந்துள்ளனர்.
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் ப்ளஸ் 2 வரை 3800 மாணவியர் வரை படிக்கின்றனர்.
உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகளும், தொழிலதிபர்களும் தங்களுடைய குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளிக்கு அருகிலேயே 7 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு கட்டிடம் விற்பனைக்கு வந்துள்ளது.
அதை வாங்குவதற்கு பள்ளி நிர்வாகம் விரும்புகிறது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவியரின் பெற்றோரையும் அழைத்து கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து பள்ளி முதல்வர் நோரா பேசியுள்ளார்.
"புதிய கட்டிடம் வாங்க இருப்பதால் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்துள்ளோம். அதை கொடுத்தால் நன்றாக இருக்கும்" என பெற்றோரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது. அங்கு படிக்கும் ஒட்டு மொத்த மாணவியரிடமும் தலா 20 ஆயிரம் ரூபாய் வசூலித்தால் 7 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது.
இது குறித்து பெற்றோர், "பள்ளி முதல்வர் பெற்றோரை அழைத்து பேசினார். அப்போது கட்டிடம் வாங்க இருப்பதாகவும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாக வேண்டும் எதிர்காலத்தில் உங்களுடைய குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். அவ்வளவு பணம் கொடுப்பதற்கு எங்களால் முடியாது 2000 ரூபாய் தருகிறோம் என சிலர் கூறினர்.
அதெல்லாம் யூஸ்லெஸ் என கூறினார். நாங்கள் பணம் கொடுக்காத பட்சத்தில் குழந்தைகளை ஏதாவது ஒரு காரணம் காட்டி மதிப்பெண் குறைக்கவோ, தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி வெளியேற்றவோ வாய்ப்புள்ளது. அதனால் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறோம். பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு எங்களுடைய புகார்களை தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளி முதல்வர் நோராவிடம் கேட்டபோது, " நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. வேண்டுகோளாக தான் கேட்கிறேன். பரிந்துரை என பலரும் சீட் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. கூடுதல் கட்டிடம் இருந்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் கேட்கிறேன். விருப்பப்பட்டவர்கள் கொடுக்கலாம். இவற்றையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். பெற்றோர் ஏன் இதையெல்லாம் வெளியில் சொல்லி கொண்டிருக்கின்றனர்'' என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில் "குளூனி பள்ளி விவகாரம் தொடர்பாக என்னுடைய கவனத்துக்கும் வந்துள்ளது. உரிய விசாரணை நடத்தி அது குறித்து தகவல் தெரிவிக்கிறேன்'' என்றார்.