நெல்லை: கோயில் பிரச்சினை காரணமாக சுடுகாட்டில் குடியேறச் சென்ற மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கோயிலில் வழிபாடு நடந்த தடை விதிக்கப் பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடும்பத்துடன் சுடுகாட்டில் குடியேற சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்குனி உத்திரம் திருவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஆனால், கடையம் அருகே உள்ள அருணாசலப்பட்டியில் மட்டும் திருவிழா கொண்டாட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது. காரணம் அங்கு ஒரே சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முப்புடாதி, காளியம்மன், ராமசாமி அம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கோடை விழாவின் போது ஊர் மரியாதை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஓரே கோஷ்டியை சேர்ந்த சேர்வைக்காரன்பட்டி முன்னாள் பஞ் தலைவர் ரவிச்சந்திரன், சின்ன மணி, பரமசிவன், மகேந்திரன், முருகன் ஆகியோர் உள்பட சுமார் 100 மேற்பட்டோர் கோயில் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் கோயில் பிரச்சனையில் நிரந்தர தீர்வு ஏற்படும் வரை ஊருக்குள் வரமாட்டோம். ரேசன் கார்டுகளை அரசிடம் ஓப்படைப்போம். அதுவரை சுடுகாட்டில் குடியிருக்க போகிறோம் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாப்பாடு தயார் செய்வதற்காக பெரிய பாத்திரங்களுடன் அவர்கள் அருகிலிருந்த சுடுகாட்டிற்கு சென்றனர். பெண்கள் பீடி சுற்றுவதற்கு் தேவையான பொருட்களையும் எடுத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சிவமுருகன், மாடசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், சாமுவேல் ஆகியோர் தலைமையில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டனர். வருவாய்துறையினரும், போலீசாரும் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து தாசில்தாரிடம் பேசி தகுந்த முடிவு எடுக்கப்படும் என டிஎஸ்பி ராஜா உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சுடுகாட்டில் இருந்து கலைந்து சென்றனர். ஆனபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.