தமிழகத்தில் நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
தமிழகத்தில் நிறைய நாரதர்கள் இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை : பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய சட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதற்குள்ளாக இதில் உள் அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பே போராட்டம் நடத்தியதாகவும் அப்போது மக்களும் அரசியல் கட்சியினரும் தனக்கு ஆதரவு வழங்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தன்னிடம் டீல் பேசப்பட்டதாகவும், அதனை தான் மறுத்துவிட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு வரக்காரணம் திமுக, அதிமுக அரசுகள் தான் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அமைச்சர் பதவிக்கு என்று சில பொறுப்புகள் இருக்கிறது. எனவே,எந்த வித ஆதாரமும் இல்லாமல் மற்றவர்கள் மேல் குற்றம் சாட்டக்கூடாது.
இவரிடம் டீல் பேசப்பட்டது உண்மை என்றால், யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதை ஆதாரத்தோடு வெளியிட வேண்டும். தெருவில் போகிற ஆள் போல பேசக்கூடாது என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மாணவிகளிடம் தவறாகப் பேசிய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கபப்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே உள் அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றும், தமிழகத்தில் இருக்கும் நாரதர்கள் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications