ஆர்கே நகரில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிர்ப்பு-தந்தி டிவி நிகழ்ச்சியில் இருந்து விரட்டியடிப்பு!!
ஆர்கே நகரில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தந்தி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கவிடாமல் அவரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகரில் தந்தி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அதிமுகவின் இரண்டு அணிகள், திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
தந்தி டிவி நிகழ்ச்சி
அனல் பறக்கும் ஆர்.கே.நகரில் தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் பாண்டே நடத்தினார். அப்போது சசிகலா கோஷ்டியின் தீவிர விசுவாசியான அமைச்சர் விஜபாஸ்கரனும் இதில் பங்கேற்றார்.
விஜயபாஸ்கருக்கு எதிர்ப்பு
ஆனால் விஜயபாஸ்கரை பேசவிடாமல் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அவரை நிகழ்ச்சி அரங்கைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
விரட்டியடிப்பு
இதனால் வேறுவழியின்றி அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சி அரங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை உருவானது. இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்கே நகரில் அமைச்சர் ஒருவரே விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீதியில் தினகரன் கோஷ்டி
ஆர்.கே.நகரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ. தங்கத் தமிழ்ச் செல்வன் திட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளரான கண்ணப்பன் என்ற அதிமுக தொண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏற்கனவே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தற்போது விஜயபாஸ்கர் விவகாரத்தால் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்வோர் எங்கிருந்து எதிர்ப்பு வருமோ என பெரும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.