ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 51வது நாளாக போராட்டம்.. மேலும் ஒரு கிராம மக்கள் ஆதரவு! பதற்றம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 51வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 51வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் பணி தொடங்கியது.
இதற்கு தூத்துக்குடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 51வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் அங்குள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த பண்டாரம்பட்டி கிராம மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் நேற்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்பு கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் தங்களது கிராமத்தில் உள்ள மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது.