விஜயகாந்த், பிரேமலதா பேச்சு- நாடார் சமூகத்தினர் கொந்தளிப்பு-கொடும்பாவி எரிப்பு
தூத்துக்குடி: தாது மணல் விவகாரத்தில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனை கடுமையாக சாடி, தூத்துக்குடியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பேசியது இப்போது ஜாதிப் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவியையும் எரித்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு நிலவுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விஜயகாந்த், பிரேமலதாவைக் கண்டித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
தூத்துக்குடி தேமுதிக கூட்டம்
தேமுதிக 9ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தபால்தந்தி காலனி மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி மாலை நடைபெற்றது.
வைகுண்ட ராஜன் யாருடைய வாரிசு.. பிரேமலதாவின் கேள்வி
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடிக்கு வந்தது முதல் வைகுண்டராஜன் என்றுதான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர் என்ன கட்டபொம்மன் வாரிசா?, வாஞ்சிநாதன் பரம்பரையா? அல்லது சுதந்திர போராட்ட தியாக குடும்பமா?.
இயற்கை வளத்த சுரண்டுகிறார்கள்
கடவுள் கொடுத்த இயற்கை வளத்தை சுரண்டுகிறார்கள். இல்லை இல்லை அரசு அனுமதியுடன் சுரண்டி விடுகிறார்கள்.
மீனவர்கள் மட்டுமே போராடுகின்றனர்
ஒரு பக்கம் கிரானைட், ஒரு பக்கம் தாது மணல் கொள்ளை என மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித்தவிக்கிறது தமிழகம். ஆனால், சில மீனவ அமைப்புகளும், சில சமூக அமைப்புகள் மட்டும் தாதுமணல் கொள்ளைக்கு எதிராக போராடி வருகிறன்றன.
நெல்லையில்தான் அளவற்ற கொள்ளை
தூத்துக்குடி மாவட்டத்தில் 15 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 65 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 சதவீதமும் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதில் அதிகமாக நெல்லையில்தான் அளவற்ற கொள்ளை நடந்துள்ளது என்று பேசினார்.
வைகுண்டராஜன் என்ற தனி மனிதன்- விஜயகாந்த்
கடைசியாக பேசிய விஜயகாந்த், வைகுண்டராஜன் என்ற தனிமனிதன் 60 லட்சம் கோடி வரை தாது மணலில் சம்பாதித்துள்ளார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன். ஆனால் அப்படிப்பட்ட வைகுண்டராஜனுக்கு ஆதரவாக கடந்த திமுக ஆட்சியில் சட்டசபையில் அதிமுக கொறடா செங்கோட்டையன், வைகுண்டராஜன் மீது தவறு இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று 19.4.07 அன்று அவர் பேசியது அரசு பதிவில் உள்ளது.
மணல் கொள்ளைக்கு அதிமுக ஆதரவு
ஆட்சியில் இல்லாத போதே வைகுண்டராஜனுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. தற்பொழுது ஆளும்கட்சியாக இருந்து இரண்டாண்டுகள் மணல் கொள்ளைக்கு அமோக ஆதரவை அளித்து வருகிறது. அரசுக்கு 60 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள வைகுண்டராஜன் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கொள்ளைத் தலைவன்
100 ஏக்கர் இடத்தை பதினெட்டாயிரம் ரூபாய்க்கும், 40 ஏக்கர் இடத்தை நாற்பது ரூபாய்க்கும் குத்தகைக்கு எடுத்து பல கோடிகளை அள்ளியுள்ள மணல் கொள்ளை தலைவன் வைகுண்டராஜனை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இதற்கு அரசும் துணை போகிறது என்று பேசியிருந்தார்.
நாடார் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு
இந்தப் பேச்சுக்கள் இப்போது ஜாதிப் பூசலை கிளப்பி விட்டுள்ளது. விஜயகாந்த், பிரேமலதாவைக் கண்டித்து வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் நேற்று தூத்துக்குடியில் கொடும்பாவிகளைக் கொளுத்திப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜயகாந்த்தைக் கண்டிக்கிறோம்
இந்த நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வம் என்பவர் விஜயகாந்த் பேச்சைக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், தாது மணல் கொள்ளை குறித்து பேசிய தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் செயலையும், பேச்சையும் வண்மையாக கண்டிக்கிறோம்.
தடையை நீக்குங்கள்
தாது மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், மீனவ பெண்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தாது மணல் அள்ளுவதற்கான தடையை நீக்கி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
பதட்டம்
இந்த போராட்டங்களால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவுகிறது. நாளை வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள் என்பதால், வன்முறை மூண்டு விடக் கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிக்குமார் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டன போஸ்டர்கள்
இதற்கிடையே, வைகுண்டராஜனின் ஆதரவாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக நெல்லை,தூத்துக்குடி,குமரி மாவட்டங்கள் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
விஜயகாந்த், பிரேமலதாவின் கடந்த காலம் என்ன...
அதில், வி.வி.வைகுண்ட ராஜன் நாடார் அவர்களை விமர்சிக்கும் விஜயகாந்த் பிரேமலதா உங்களது கடந்த காலம் என்ன..? இவண் . கருங்கல் ஜார்ஜ் தமிழ்நாடு நாடார் மாகஜன சங்கம் என்று வாசகம் இம் பெற்றுள்ளது.
விஜயகாந்த்தின் பேச்சு தற்போது ஜாதிப் பிரச்சினையாக மாறி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.