வெயிலில் வாடும் மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைக்க தேமுதிகவினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது,
கோடை காலம் என்றாலே கொளுத்தும் வெயில் தான் நினைவுக்கு வருகிறது. இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. வெந்த புண்ணில் வேலை எறிவதைப் போல, ஏற்கனவே நொந்து போய் உள்ள மக்களுக்கு மின்வாரியம் அமல்படுத்தும் மின்வெட்டு தாங்க முடியாத துயரத்தை தந்து வருகிறது. குடிக்க தண்ணீர் முதல், இரவு படுத்துத்தூங்க மின்விசிறி வரை இன்று மின்சாரம் இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது.
இந்த கோடை காலம் எப்பொழுது முடியுமோ என்ற ஏக்கம் தான் இன்று மக்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோடை காலத்தின் கொடுமையை தவிர்க்க நம்மால் இயன்ற நற்பணிகளை ஆண்டுதோறும் நாம் செய்து வருகிறோம். மக்களுக்கு உதவிட தண்ணீர் பந்தல்கள் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீர்மோர், பானகம், போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை செய்வது வாடிக்கையாகும்.
அதற்கொப்ப இந்த ஆண்டும் தேமுதிக சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து முறையாக அவை செயல்பட வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு கழக தோழர்கள் இந்த எனது வேண்டுகோளை தலையாய பணியாக கருதி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பெரும்பாலும் கூடுகின்ற அனைத்து இடங்களிலும், அவர்களின் தாகம் தணித்திடும் வகையில் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அனுமதியை தங்களுடைய மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இருந்து முறையாக பெற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை சிறப்பாக செய்திட வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.