சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு... சடலத்துடன் சாலை மறியல்... போலீஸ் தடியடி... நெல்லை அருகே பரபரப்பு
நெல்லை: நெல்லை அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவானது. இதனால் பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிங்கிலிப்பட்டி கிராமம். இது கடையநல்லூர் யூனியன் பொன்னையாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இங்கு சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தகிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை எரிக்க பொன்னையாபுரத்திற்கு அருகே ஒரு சமுதாயத்தினருக்கும், கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் தென்புறம் உள்ள ஒரு இடத்தில் மற்றொரு சமூகத்தினருக்கும் சுடுகாடு உள்ளது.
இதில் புன்னைபேரி சுடுகாடு செல்லும் பாதை அருகே சிலர் வீடு கட்டி ஆக்கிரமித்து கொண்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சுடுகாட்டு செல்ல மாற்று பாதை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வருவாய்துறை சார்பில் சிங்கிலிப்பட்டியிலிருந்து சங்காணப்பேரி செல்லும் சாலையில் ஒரு சிறிய இடம் ஓதுக்கப்படும் என கடையநல்லூர் தாசில்தார் அறிவித்தார். ஆனால் இதுவரை இடம் ஓதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிங்கிலிப்பட்டியை சேர்ந்த சண்முகதாய் என்ற பெண் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மாலை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில் எரிக்க கொண்டு வந்தனர். அப்போது பாதையை ஆக்கிரமித்து இருந்தவர்கள் இங்கு உடல்களை அடக்கம் செய்ய கூடாது என கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.