புதுக்கோட்டை அருகே சுகாதார நிலையம் கோரி மக்கள் சாலை மறியல் - 3 பேர் மயக்கம்
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே புதுப்பட்டியில் சுகாதாரநிலையம் கோட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தின் போது 3 பேர் மயக்கமுற்றதால் அங்கு பரபரப்பான சூழ்ல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பல்லவராயன்பத்தை ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பட்டியில் துணை சுகாதார நிலையம் செயல்பபட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்குமேல் முறையாக செயல்படாததால் மருத்துவமனை வளாகம் சமூக விரோதிகளின கூடாரமாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை புதுப்பட்டியில் தொடங்கினார். அப்போது இந்த கிராமத்தில் இயங்கிவரும் துணை சுகாதார நிலையத்தில் போதிய சிகிச்சை அளிப்பதற்கான வசதி இல்லை என்றும் மேலும் இந்த துணைசுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு ஆரம்ப சுகாகதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து துணைசுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது,கறம்பக்குடி தாலுகா குழந்திரான்பட்டு ஊராட்சிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு தரம் உயத்தப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது மூன்று பேர் மயக்கமடைந்தனர், பின்னர் அவர்களுக்கு சாலையிலேயே முதல் உதவி சிசிக்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிப், புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கலைவாணி ஆகியோர் போராட்டகாரர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.