அதிமுகவுக்கு புரட்சி பாரதம் ஆதரவு- ஜெ.வை நேரில் சந்தித்து தெரிவித்தார் பூவை ஜெகன்மூர்த்தி
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது புரட்சி பாரதம் கட்சி.
அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையிலான குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான செய்தியாளர் கூட்டம் நேற்று (10-03-2014) சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் மாலை 4 மணியளவில் நடைபெற்றது. அப்போது கட்சித் தலைவர் பூவை.எம்.ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தமிழகத்தில் சாதி கலவரத்தை ஒடுக்கி சமூக நீதியை பாதுகாத்து வருபவர்.தலித் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு ,கல்விக் கட்டணம் அரசே ஏற்றுக்கொண்டது. ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அம்மா உணவகம் மற்றும் அம்மா குடிநீர் மிக குறைந்த விலையில் கொடுத்து வருவது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்து தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிசந்திரன் .ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
எனவே நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம், 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாங்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்வோம்.
தமிழகத்திலிருந்து பிரதமராக ஜெயலலிதா வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தமிழ் உணர்வாளர்கள் அவரை ஆதரிக்க வேண்டும் என்று பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.
இதற்கிடையே, வரும் 13-ந் தேதி மாலை 3.00 மணியளவில் பூவிருந்தவல்லி சுந்தர் திருமண மண்டபத்தில் புரட்சி பாரதம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் குறித்தும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.