ஆர்.கே. நகரில் முடக்கப்பட்டு டெல்லியில் கிளர்ந்து எழுந்த இரட்டை இலை!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு முன்னர் முடக்கப்பட்ட இரட்டை இலை அந்தத் தேர்தலுக்கு முன்பே மீண்டும் கிடைத்துவிட்டது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னர் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமானது தற்போது அந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே கிடைத்துவிட்டது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து எடப்பாடி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் என தனி அணியாக செயல்பட்டு வந்தன.
இதையடுத்து ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் ஆணையம்அறிவித்தது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்க வேண்டும் என்று எடப்பாடி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.
இரட்டை இலை சின்னம்
இதையடுத்து கடந்த மார்ச் 23-ஆம் தேதி அன்று இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன் பின்னர் இரு அணிகளும் அதிமுக அம்மா அணி என்றும் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என்று செயல்பட்டு வந்தனர். தொப்பி சின்னத்தையும், இரட்டை விளக்கு சின்னத்தையும் தேர்ந்தெடுத்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ரெய்டு நடைபெற்றது. அப்போது ரூ.89 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்தாண்டுக்குள் தேர்தல்
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்தாண்டுக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி தகவல்
இந்நிலையில் இரட்டை இலைக்கு உரிமைக் கோரி தினகரன் அணியினரும், எடப்பாடி- ஓபிஎஸ் அணியினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர். இதில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைத்துவிட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே ரிலீஸ்
கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை போல் தற்போது டிசம்பருக்குள் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பே இரட்டை இலை மீண்டும் துளிர்விட தொடங்கிவிட்டது. என்ன ஒரு வித்தியாசம், அப்போது ஈபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் பிரிந்திருந்தனர். தற்போது இணைந்துவிட்டனர்.