வேலூர்- ஏ.சி. சண்முகம், தஞ்சாவூர்- முருகானந்தம் பாஜக வேட்பாளர்கள்! வானதி, தமிழிசை ஏமாற்றம்!!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர் வேட்பாளராக கருப்பு முருகானந்தமும் வேலூர் வேட்பாளராக ஏ.சி. சண்முகமும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளையும் எதிர்பார்த்த பாஜகவின் வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை செளந்தராஜன் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளில் தஞ்சாவூர், வேலூர் தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்த இரண்டு தொகுதிகளையுமே அக்கட்சியின் பெண் பிரமுகர்களான வானதி சீனிவாசனும் தமிழிசை செளந்தராஜனும் குறி வைத்தனர்.
ஆனால் தற்போது இருவருக்கும் கொடுக்கப்படவில்லை. தஞ்சாவூரில் கருப்பு முருகானந்தத்துக்கும் வேலூரில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிக் கட்சித் தலைவரான ஏ.சி. சண்முகத்தை பாஜக தொடக்கம் முதலே கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக வேலூரில் ஏ.சி. சண்முகத்தைத்தான் பாஜக நிறுத்தும் என்று கூறப்பட்டு வந்தது. கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட தகுதியானவர்கள் இருக்கும் போது வேறு கட்சி தலைவரை எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம் என்பதுதான் பாஜகவின் வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் தரப்பினரின் குமுறலாக இருக்கிறது.