ராகுல் காந்தி சிபாரிசில் தான் ஜோதிமணிக்கு சீட் கிடைத்தது: ஞானதேசிகன்
கரூர்: ராகுல் காந்தி சிபாரிசில் சீட் வாங்கியவர் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் ரகசியத்தை போட்டு உடைத்தார்.
கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கட்சி செயல்வீரர்கள் கூடட்டத்தில் தன்னிடம் ரூ 2,400 மட்டுமே உள்ளது. அதனால் என்னால் கட்சி நிர்வாகிகளுக்கு டீ, காபி, டிபன் கூட வாங்கித் தர முடியாது. என்னை வெற்றி பெற வைக்க நீங்கள் தான் உங்கள் சொந்த பணத்தை போட்டு வந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாக கரூர் தொகுதியில் இருந்து ஜோதிமணியை மாற்றியே ஆக வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் போர்க்கொடி பிடித்தனர்.
இந்த நிலையில் இந்த ஜோதிமணிக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி அல்லாத கட்சிகளால் நிலையான ஆட்சியை தர முடியாது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சிபாரிசில் இளம் வயது நபர்களுக்கு இந்த லோக்சபா தேர்தலில் அதிக சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் கரூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜோதிமணியும் ஒருவர். எனவே, ஜோதிமணியை வெற்றி பெற வையுங்கள் என்றார்.
பிரச்சாரத்தின் போது, மாவட்ட தலைவர் பேங்க். சுப்பிரமணியம், தாந்தோனி தலைவர் சிவசாமி, கரூர் நகர் மன்ற கவுன்சிலர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட வெகு சிலரே இருந்தனர். பலர் எஸ்கேப் ஆகிவிட்டனர்.