சொட்டச் சொட்ட நனைந்த 19 தமிழக மாவட்டங்கள்- வழக்கத்தைவிட பொழிந்து தள்ளிய “மழை”!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையான இந்த கால கட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 19 மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கொஞ்ச லேட்டாக அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தான் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கனமழை பெய்ததால் தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
இப்போது உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதில் ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 48 செ.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழையும் பெய்ததால் அந்த மாவட்டம் வெள்ளத்தில் மிதந்தது.
எஞ்சிய அளவிலேயே மழை:
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "தமிழகம், புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக இயல்புக்கு எஞ்சிய அளவிலேயே மழை பதிவானது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இயல்புக்கு குறைவாகவே மழை பெய்தது. 2012 ஆம் ஆண்டில் 13 சதவீதமும், 2013 ஆம் ஆண்டில் 33 சதவீதமும் இயல்புக்கு குறைவாகவே மழை பதிவானது.
கொட்டித் தீர்த்த மழை:
தென் பசிபிக்கடல் பகுதிகளில் இயல்பை காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் வடகிழக்கு பருவ மழையானது அதிகம் பெய்யும். அதேபோல் இந்த ஆண்டு அதிகம் மழை பெய்துள்ளது. புயல் வரும்போது கிடைக்கும் மழையை காட்டிலும் காற்றழுத்த தாழ்வின் போது கிடைக்கும் மழை அதிகமாகும்.
வங்கக் கடலே காரணம்:
அதைபோல் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மூலம் நமக்கு அதிக மழை கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தைவிட இப்போது பெய்துள்ள மழை அதிகம் ஆகும்.
2013ல் 33 சதவீதம் கம்மிதான்:
வங்க கடல் பகுதியில் 2013 ஆம் ஆண்டு அதிக அளவில் புயல்கள் உருவானது. ஆனாலும் அவை தமிழகம் நோக்கி வரவில்லை. இதனால் அந்த ஆண்டு இயல்பைவிட 33 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது.
இந்த வருஷம் ரொம்ப ஜாஸ்தி:
இப்போது தொடர்ந்து வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகி வந்ததாலும் அதே சமயத்தில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவானதாலும் தமிழகத்துக்கு மழை அதிகம் கிடைத்து விட்டது.
19 மாவட்டங்களில் அதிகம்:
இதில் கடந்த 25 ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி உள்பட 19 மாவட்டங்களில் இயல்பைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளது. அரியலூர், கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை உள்பட 13 மாவட்டங்களில் இயல்பு நிலை அளவுக்கு மழை கிடைத்துள்ளது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 822.3 மி.மீ. மழை பெய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.