2வது நாளாக சென்னையைப் புரட்டிப் போட்ட காற்று + மழை.. சுனாமி பீதிக்குள்ளான பட்டினப்பாக்கம்
சென்னை: கடந்த 2 நாட்களாக சென்னையில் மாலைக்கு மேல் பலத்த மழையும், சூறைக் காற்றும் வீசி வருவதால் மகிழ்ச்சி சற்றே பீதியடைந்துள்ளனர். மழையால் வெட்கை தணிந்துள்ள போதிலும், இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசுவதால் மின்வெட்டும் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாகி வருகிறது.
2வது நாளாக நேற்றும் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இடி மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியது. சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சாதாரணமாக ஆரம்பித்த மழை பின்னர் வேகம் எடுத்து மக்கள் பீதிக்குள்ளாகும் அளவுக்கு கொட்டித் தீர்த்தது.
நகரிலும், புறநகர்களிலும்
சென்னை நகரிலும், மணலி, மாத்தூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம், ஊரப்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாரவம், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட புறநகர்களிலும் பலத்த மழை பெய்தது.
பீச்சுக்கு வந்தவர்கள் ஓட்டம்
மாலையில் மெரீனா கடற்கரைக்கு காற்று வாங்க வந்த மக்கள் திடீர் மழையில் சிக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. மறைந்து நிற்க இடம் இல்லாமல் மக்கள் ஓடியதைப் பார்க்க முடிந்தது.
மரங்கள் விழுந்தன
பலத்த காற்றும் கூடவே வீசியதால் சில இடங்களில் மரங்கள் விழுந்ததில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். கோயம்பேடு 100 அடி சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நின்ற பெரிய மரம் சாலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
புத்தகக் கண்காட்சியில் பாதிப்பு
சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், தீவுத்திடலில் நடந்து வரும் புத்தக கண்காட்சியிலும் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள முதல் மற்றும் கடைசி வரிசையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தது. சேதமடைந்த புத்தகங்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றாலும், சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் சேதமடைந்திருக்கும் என தெரிகிறது. மேற்கொண்டு புத்தகங்கள் சேதமடையாமல் இருக்கவும், புத்தகத்தை பாதுகாக்கவும் அங்குள்ள கடைக்காரர்கள் போராடினார்கள். இந்த நிலையில், நேற்று இரவும் கனமழை கொட்டியதால், புத்தக கண்காட்சியில் உள்ள கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
சுனாமி பீதி
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சுனாமியின்போது பெரும் பாதிப்பை சந்தித்தவர்கள். சில நாட்களாகவே கடலில் வழக்கத்திற்கு மாறாக அலைகள் சீற்றத்துடன் ஆர்ப்பரித்து காணப்பட்டது. பேரிரைச்சலுடன் ஆள் உயரத்துக்கு எழும்பி வரும் அலைகள் மின்னல் வேகத்தில் கரையில் மோதிச்சென்றன.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் நீர் மட்டம் உயர்ந்து மெல்ல, மெல்ல அதிகரித்து கரைநோக்கி வந்துகொண்டே இருந்தது. கடற்கரையோர பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நேற்று காலையில் திடீரென கடல் நீர் புகுந்தது. மேலும் கரையோரம் உள்ள 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை கடல் அலை உள்நோக்கி இழுத்துச்சென்றது. வீட்டில் இருந்த பொருட்களும் கடல் நீரில் இழுத்துச்செல்லப்பட்டன. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. சமையல் அடுப்பு, நாற்காலி, பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகங்கள், துணிமணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் தண்ணீரில் நனைந்து நாசமாகின. இதனால் சுனாமி வந்து விட்டதோ என்ற பீதியில் மக்கள் உறைந்தனர்.
மொத்தத்தில் 2வது நாளாக மழையும், காற்றும், கடல் கொந்தளிப்பும் சென்னை மக்களை புரட்டிப் போட்டு விட்டது.