சென்னையில் பேருந்துகள் இயக்கம்: இயல்பு நிலை மெல்லத் திரும்புகிறது...
சென்னை: அடைமழை, பேய்மழை, காட்டுமிராண்டித்தனமாக பெய்த மழை என பலவிதமாக ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட மழை தனது தீவிரத்தை சற்றே குறைத்துக்கொண்டதை அடுத்து சென்னை மாநகரில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. எனினும் இழந்த பொருட்களை எப்படி மீட்பது என்பதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கேள்வியாக உள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் விடாமல் பெய்த மழை, சென்னையை புரட்டி போட்டுவிட்டது. வரலாறு காணாத அளவிற்கு பெருகிய வெள்ளநீர் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டது.
வீடுகளை இழந்து உடைமைகளை இழந்து ஒரே நாளில் வீதிக்கு வந்துள்ளனர் பல ஆயிரக்கணக்கான மக்கள். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர் எப்போது திரும்புவது என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
கைகளில் பெட்டி கழுத்தில் குழந்தை
முழங்கால் அளவு தேங்கிய வெள்ள நீரில் கையில் கிடைத்த உடமைகளை எடுத்துக்கொண்டும், குழந்தைகளை தோள் மீது உட்கார வைத்துக்கொண்டும் நடந்து கடந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நடக்க முடியாத பாட்டியை தூக்கிக் கொண்டு வந்து பாதுகாத்தனர் இளைஞர்கள்.
போக்குவரத்து முடக்கம்
கனமழையால் பஸ், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதித்தன. மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து 5 நாட்கள் முழுமையாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் முக்கிய அங்கமான மாநகர பேருந்து போக்குவரத்தும் கடந்த சில நாட்களாக மிக குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் சென்னைவாசிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
வெள்ளநீரினால் சோகம்
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் பல பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் கடந்த 3 நாட்களாக இயக்கப்படவில்லை. செங்கல்பட்டு - திருச்சி சாலையில் வெள்ளம் ஆறாக ஓடியதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பேருந்துகள் நிறுத்தம்
சுரங்கப்பாதைகள், ரயில் பாதையின் தண்ணீர் குளங்கள் போல் தேங்கி நின்றதால் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. வடசென்னை பகுதிகளில் மிக குறைந்த அளவில் பஸ்கள் ஓடின. வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், கிண்டி, தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், வண்டலூர், செம்மஞ்சேரி, வேளச்சேரி பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.
சாலைகளில் வடிந்த வெள்ளம்
பூந்தமல்லி சாலையில் கூட குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பல இடங்களில் இடுப்பளவிற்கு வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் பேருந்துகளை இயக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் மழை குறைந்து படிப்படியாக தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இன்று முதல் மாநகர பேருந்துகள் அதிகளவு ஓடத் தொடங்கின. 3 நாட்களாக ஓடாமல் இருந்த பல பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
நின்று போன மழை
வியாழக்கிழமை முதல் மழை படிப்படியாக குறைந்து தற்போது லேசாக வெயிலடிக்கத் தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகளின் முகங்களில் மகிழ்ச்சி ரேகைகள் தென்படத்தொடங்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால் மீட்புப்பணிகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
போக்குவரத்து தொடக்கம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. 2 நாட்களாக மழை படிப்படியாக குறைந்ததால் வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
சொந்த ஊர் திரும்பும் பயணிகள்
அரசு விரைவு பேருந்துகள் மட்டுமின்றி விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழக பஸ்களும் சென்னை நகருக்கு வந்தன. நேற்றைவிட இன்று காலையில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் வழக்கம் போல் பஸ்கள் புறப்பட்டு சென்றன. ரயில்கள் ஓடாததால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெள்ளத்தில் சிக்கிய வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கிறார்கள்.
பெரம்பூரில் வடியாத வெள்ளம்
வியாசர்பாடி, ரயில்வே மேல்பாலம், பெரம்பூர் ஜமாலியா வழியாக பேருந்துகள் இயக்க முடியவில்லை. இன்னும் அங்கு வெள்ள நீர் ஆறாக தேங்கி கிடக்கின்றன. இதேபோல புறநகரிலும் வெள்ளம் வடிவதில் சிக்கல் எழுந்துள்ளதால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மெல்ல திரும்பும் இயல்புநிலை
இது போல முடிச்சூர் மேடவாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளுக்கு குறைந்த அளவில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டன. கேளம்பாக்கம், வண்டலூருக்கு பேருந்து போக்கு வரத்து இன்று தொடங்கியது.
பேருந்துகள் அதிகளவு ஓடத் தொடங்கியதால் 4 நாட்களாக ஒரே இடத்தில் முடங்கி கிடந்த மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
உடமைகளை தேடும் மக்கள்
சைதாப்பேட்டை பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளத்தால் உடமைகளை போட்டுவிட்டு வெளியேறிய மக்கள் வெள்ளம் வடிந்த பின்னர் தங்களின் குடிசைகளில் மீதமுள்ள பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். நான்கு சுவர்கள் மட்டுமே பலருக்கும் மிச்சமிருக்கிறது என்பதால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்