நன்றி மறவா குணம்... ரஜினியிடம் இருக்கும் சிறந்த தலைமைப் பண்பு!
ரசிகர்களுடனான சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் மறக்காமல் தனக்கு வெற்றிப்படங்களைத்தந்த இயக்குனர்களை அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
Recommended Video
சென்னை: இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் இன்று இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானத்தை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளார். கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குனர்களை மறவாமல் அழைத்து தன்னைப் பற்றி ரசிகர்களுக்கு புரிய வைக்கிறார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே 15 மாவட்ட ரசிகர்களை கடந்த மே மாதம் சந்தித்த நிலையில் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் ரஜினியுடன் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
நாள்தோறும் ஆயிரம் பேர் வீதம் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இதனால் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை முதலே ரசிகர்கள் கூட்டம் ராகவேந்திரா மண்டபத்தில் அலைமோதுகிறது.
வெள்ளை ஜிப்பாவில் வந்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்தும் காலை 8 மணிக்கே திருமண மண்டபத்திற்கு வந்து மேடையில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். வெள்ளை ஜிப்பாவில் வந்துள்ள ரஜினியின் விழா மேடை இந்த முறையும் தாமலை இலை மேல் கதம் கதம் முத்திரை பதித்த பின்திரை போடப்பட்டுள்ளது.
ரசிகர்களுடன் பேச வைக்கும் ரஜினி
ரசிகர்களுடனான சந்திப்பின் போது ஒவ்வொரு முறையும் தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குனர்களை அழைத்து அவர்கள் மூலம் தன்னைப் பற்றிய புரிதலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார். கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த போது இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை அழைத்து ரசிகர்களுடன் பேச வைத்தார் ரஜினி.
முத்துராமனை முத்திரை பதித்த படம்
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் உருவான ஆறிலிருந்து அறுபது வரையிலான படம், ரஜினியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வெகுஜன நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு தேர்ந்த நடிகராகவும் ரஜினி முன்னிறுத்தியது. பெண்கள், குடும்ப ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கிய படம். சிறந்த நடிகருக்கான விருதைப் ரஜினிக்குப் பெற்றுத்தந்தது இந்தப் படம்.
மகேந்திரனின் இயக்கத்தில்
இதே போன்று இந்த முறை இயக்குனர் மகேந்திரனை அழைத்து ரஜினி ரசிகர்களுடன் பேச வைத்துள்ளார். மகேந்திரன் எழுதி இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் காளி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ரஜினியின் நடிப்புக்கு முதல் முறையாக அரசு விருதை வாங்கிக் கொடுத்தது. அதிக வசனங்கள் இல்லாமல், காட்சிகளால் மக்களைக் கவர்ந்த படம்.
ரஜினியின் சிறந்த குணம்
ரசிகர்களுடனான சந்திப்பு என்பது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், தலைமை பண்புக்கே உரிய முறையில் பண்பாக தன்னை வைத்து வெற்றிப்படம் எடுத்த இயக்குனர்களை அழைத்து சிறப்பிக்கிறார் ரஜினி. ரஜினியிடம் இருக்கும் சிறப்பான குணங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.