ஜூலையில் கட்சியை அறிவிப்பார் ரஜினி.. பெங்களூரிலிருந்து அண்ணன் சத்யநாராயணா தகவல்
பெங்களூரு: நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சியை வரும் ஜூலை மாதம் அறிவிப்பார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தகவல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதனை அவர் ரசிகர்கள் மத்தியில் சூசகமாக அறிவித்தாலும், அவரது நண்பர்கள் ஊடகங்களில் உறுதி செய்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்க்வாட் பெங்களூரில் ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஜினி புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியல் பிரவேசம், புதுக்கட்சி தொடங்குவது குறித்து தனது நண்பர்கள், நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்களிடம் ரஜினிகாந்த் முதல் சுற்று ஆலோசனை செய்து முடித்துள்ளார். எவ்வளவு ரசிகர்களைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்தித்து விட வேண்டும் என்பதே ரஜினியின் விருப்பம். ஜூலைக்குள் அனைத்து மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்ததும், புதிய கட்சியை அறிவிப்பார். தமிழ் நாட்டுக்கு புதிய அரசியல் சகாப்தம் மலரும்.
ஊழலை ஒழிப்பதுதான் ரஜினியின் முதல் நோக்கமாக இருக்கும். மக்களுக்கான திட்டங்கள் அவர்களுக்குப் போய்ச் சேருவதே இல்லையே என்ற வேதனை எப்போதும் ரஜினிக்கு உண்டு. இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார்," என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி இப்போதுள்ள எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டார் என்றும், கட்சி கட்டமைப்பு, கொடி, சின்னம் போன்றவற்றை முடிவு செய்யும் வேலை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications