பாஜகவில் சேர ரஜினியை கட்டாயப்படுத்த முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் இணையவேண்டும் என்றும், ஆதரவு தரவேண்டும் என்றும் ரஜினிகாந்தை கட்டாயப்படுத்த முடியாது என்று பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன் லதா ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவர் பேட்டியளித்துள்ளார்.
ரஜினி வீட்டில் நவராத்திரி கொலு
ரஜினிகாந்த் தேசிய சிந்தனையுள்ளவர். மக்கள் நலனை முன் வைத்து கருத்துக்களை சொல்பவர். அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் நவராத்திரி விழாவுக்கு அழைத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சென்றேன். ரஜினிகாந்த் படப்பிடிப்புக்கு சென்றிருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.
அரசியலில் ரஜினி
ரஜினிகாந்த் மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர். தமிழகத்தில் எப்போது எல்லாம் மக்கள் நலன் பாதிக்கப்படுகிறதோ? அப்போதெல்லாம் அவர் குரல் கொடுத்து இருக்கிறார். மக்கள் நலனுக்காக வாஜ்பாய் அரசு நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்தபோது ஒரு கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்தார்.
ரஜினி ஆதரவு தரவேண்டும்
இன்றைக்கு தமிழக அரசியலில் அசாதாரண நிலை உள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலனை காக்கும் ஆட்சி மலருவதற்கு ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும்.
ரஜினிக்கு வரவேற்பு
பாஜகவில் சேரும்படி ரஜினிகாந்தை கட்டாயப்படுத்த முடியாது. அது அவருடைய விருப்பம். பாஜக தலைமையில் நல்லாட்சி அமைவதற்கு உதவும் வகையில் அவர் ஆதரவு அளித்தால் வரவேற்போம்.
பதவிக்கு அப்பாற்பட்டவர் ரஜினி
பாரதிய ஜனதா கட்சியில் பதவிகளை பொறுத்தவரையில் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பதவியை எதிர்பார்த்து தான் அவர் ஆதரவு தருவார் என்று சொல்ல முடியாது. அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஆகவே இந்த கேள்வியே தேவையற்றது. இருப்பினும் தமிழகத்தை பற்றி இப்போது சொல்ல முடியாது.
ரஜினி - கமல் பிரிக்கக்கூடாது
நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். நடிகர் விஜயையும் அவர் சந்தித்தார். பொதுவாக மக்கள் நலன் திட்டங்களை செயல்படுத்தும்போது பிரித்து பார்க்க கூடாது. கமல்ஹாசன் பொது தொண்டில் ஆர்வம் உள்ளவர். ஆகவே ரஜினி, கமல் என்று பிரித்து பார்க்க கூடாது. நல்ல திட்டம் வரும்போது, அதை பிரபலங்கள் ஆதரவு தெரிவிக்கும்போது அந்த திட்டம் எளிதாக மக்களை சென்றடைந்து விடும். நடிகர் சூர்யாவும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.