காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவது சரியானதே... ரஜினி சகோதரர் பரபரப்பு பேட்டி
திருச்சி: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே என பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா.
காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகள் பந்த் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவ்வாறு கர்நாடகா அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காது, விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி வந்த நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணா அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
ரஜினிக்கு அரசியல் வேண்டாம், அவர் அரசியலுக்கு வர வேண்டாம், ரஜினிக்கு பெயர் நன்றாக உள்ளது. அரசியலில் ஈடுபட்டால் நல்லவர்களும் கெட்டவர்களாகி விடுவார்கள். ரஜினியை தங்கள் இயக்கத்துக்கு வரச்சொல்லி தி.மு.க., காங்கிரஸ் உள்பட எல்லா கட்சி தலைவர்களும் கூப்பிடுகிறார்கள்.
ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டால் மற்ற கட்சியை திட்ட வேண்டிவரும். அதனால் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது. தமிழ்நாடு புண்ணிய பூமி. ரஜினி தமிழ்நாட்டின் குழந்தை. அந்த குழந்தைக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆசீர்வாதம் வேண்டும்‘ எனக் கூறினார்.
காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் வேண்டும், கர்நாடகத்துக்கும் தண்ணீர் வேண்டும, தமிழ் நாட்டிலும் தண்ணீர் கேட்கிறார்கள், கர்நாடகத்திலும் தண்ணீர் கேட்கிறார்கள்.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே. இப்புதிய அணைகள் மூலம் இரு மாநில மக்களும் நன்மை அடைவார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், லிங்கா திரைப்படம் வெளியான பின் ரஜினி ரசிகர்களை சந்திப்பார். நதி நீர் இணைப்பு திட்டம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியானதும் ரஜினி அறிவித்த ஒரு கோடி ரூபாயை உரியவர்களிடம் கொடுப்பார்' என சத்யநாராயணா கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, சத்தியநாராயணாவுடன் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கர்ணன், செந்தில், நாகர், ஸ்ரீரங்கம் ரமேஷ், காமராஜ், சண்முகம், மணிகண்டம் ஆனந்த், சமயபுரம் முருகேசன், சுரேஷ், மணி, துவாக்குடி சாமி மாரியப்பன், தென்னூர் உதயா, ராஜ் ஆகியோர் உள்பட பலர் வந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ராகவேந்திர மடத்தில் அன்னதானம் நடந்தது.












Click it and Unblock the Notifications