ரூ. 19,500 கோடி தமிழக ரயில் திட்டங்கள் ரத்து?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் ரூ.19,500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த 14 ரயில் திட்டங்களை ரத்து செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ரூ.19,500 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்த 14 தொடர்வண்டித் திட்டங்கள் உட்பட மொத்தம் 160 திட்டங்களை ரத்து செய்ய மத்திய தொடர்வண்டித்துறை திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்போக்கான அணுகுமுறையுடன் கூடிய இம்முடிவு கண்டிக்கத்தக்கது.தொடர்வண்டித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ்நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்த காலத்தில் தான் தமிழகத்தை மீட்டர்கேஜ் பாதை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொடர்வண்டித்துறை வரலாற்றிலேயே 2002 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் தான் தமிழகத்திற்கு அதிக அளவில் தொடர்வண்டித்திட்டங் கள் அறிவிக்கப்பட்டன; இந்த காலத்தில் தான் தமிழக திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை தொடர்வண்டித்துறை ஆவணங்களிலிருந்து அறிய முடியும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர் பதவியில் இல்லாத நிலையில், தமிழகத்திற்கான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தன. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட தொடர் வண்டித் துறை நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரூ.19,500 கோடி மதிப்பிலான திட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளத்திற்கான தொடர்வண்டித் திட்டங்களும் ரத்து செய்யப்படவுள்ளன என்ற போதிலும், அம்மாநிலங்களைவிட பல மடங்கு அதிக மதிப்புள்ளத் திட்டங்கள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் அதற்கான பணிகள் இன்றுவரை தொடங்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டியே இத்திட்டங்களை அரசு ரத்து செய்யவிருக்கிறது.