ஜெ. சுதந்திர தின உரையில் மதுவிலக்கு அறிவிப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் 69-ஆவது விடுதலை நாளையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. குறிப்பாக மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியிடாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2 முறை கைது
மதுவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறது. 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மதுவிலக்கு கோரி எண்ணற்ற போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியுள்ளது. இதற்காக இரு முறை நான் கைது செய்யப்பட்டுள்ளேன்.

பா.ம.க.வால் கொந்தளிப்பு
பா.ம.க. நடத்திய போராட்டங்களின் பயனாக மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதை மது ஒழிப்பு போராட்டங்களில் காணமுடிகிறது. மக்களின் இந்த உணர்வை மதித்து மதுவிலக்கு குறித்த அறிவிப்பை விடுதலை நாள் உரையில் வெளியிட வேண்டும் என நான் வலியுறுத்தியிருந்தேன்; மக்களும் இதைத் தான் எதிர்பார்த்திருந்தனர்.

அக்கறை இல்லாத ஜெ.
ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்கக்கூடாது என்பதையே கொள்கையாக வைத்திருக்கும் ஜெயலலிதா மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதன்மூலம் மக்கள் நலனில் தமக்கு அக்கறை இல்லை என்பதை நிரூபித்து விட்டார்.

கண்டனத்துக்குரியது
மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழந்தாலும் பரவாயில்லை; அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.26,000 கோடி வருமானமும், மிடாஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் பல்லாயிரம் கோடி லாபமும் தான் முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார். மதுவுக்கு ஆதரவான தமிழக அரசின் நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதுதான் பொருளாதார சுதந்திரம்?
விடுதலை நாள் உரையில், தமிழகத்தில் ஏழ்மையை ஒழித்து அனைவரும் பொருளாதார சுதந்திரம் அடையச் செய்வதே தமது அரசின் நோக்கம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடப்பாண்டில் மது விற்பனை மூலம் ரூ.30,000 கோடி லாபம் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, குறைந்தது ரூ.45,000 கோடி அளவுக்காவது மது விற்பனை செய்யப்பட வேண்டும். இதன்மூலம் தமிழகத்திலுள்ள 2 கோடி குடும்பங்களிடமிருந்து சராசரியாக 22,500 ரூபாயை மதுவைக் கொடுத்து பறித்துக் கொள்கிறது. ஒருபுறம் ஏழை மக்களின் பணத்தை இப்படி பறித்துக் கொண்டு , மற்றொருபுறம் ஏழ்மையை ஒழித்து பொருளாதார சுதந்திரம் அளிக்கப்போவதாக கூறுவதை விட மோசமான ஏமாற்று வேலை எதுவும் இருக்க முடியாது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

போராடுவோம்..
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் ஏற்றம் பெற வேண்டுமானால் அதற்கான முதல் நடவடிக்கை மது ஒழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு தாம் தயாரில்லை என்பதை ஜெயலலிதா காட்டி விட்டார். மக்களின் ஆதரவுடன் மதுவிலக்குக்கு எதிரான இத்தகைய தடைகளை அகற்றி தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்தும் வரை பா.ம.க. ஓயாது; கடைசி சொட்டு மது இருக்கும் வரை போராடும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications