பழனிசாமியும், விஜயபாஸ்கரும் நீரோ மன்னனின் வாரிசுகள்.. வெளுத்துக் கட்டிய ராமதாஸ்
நீரோ மன்னனின் நிகழ்கால வாரிசு தான் முதல்வர் பழனிசாமி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனின் நிகழ்கால வாரிசு தான் முதல்வர் பழனிசாமி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு மரணங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
ரோம் நகரம் தீப்படித்து எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் நிகழ்கால வாரிசு தான் பழனிசாமி. சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் நீரோ மன்னனின் வாரிசு தான்.
டெங்குவால் மணிக்கு ஓர் உயிர் பிரிந்து கொண்டு இருக்கும்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துகின்றனர். பழனிசாமியும், விஜயபாஸ்கரும் மக்களைப்பற்றிய கவலையின்றி கொண்டாட்டங்களில் குதூகலிக்கின்றனர். 5 மாதமாக அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் டெங்குவால் பாதித்துள்ளனர், 250 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு பொய்த்தகவலைக் கூறியுள்ளது. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் குழந்தைகளை டெங்குவிற்கு பறிகொடுத்த மரண ஓலம் கேட்கிறது. சொந்தங்களை இழந்த தமிழக மக்களின் சாபத்தில் இருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.