லோக்சபா தேர்தல்.. பிரசாரத்துக்கு வர மறுக்கும் ராமதாஸ்.. கலக்கத்தில் பாமக
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் மகன் அன்புமணி மீது கடும் கோபத்தில் இருக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரத்துக்கு வருவது சந்தேகமே என்கின்றனர் பாமகவினர்.
வானம் உள்ள வரை.. பூமி உள்ளவரை தேசியக் கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணியே கிடையாது என்று பிரகடனம் செய்தவர் டாக்டர் ராமதாஸ். அத்துடன் தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகாலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு அத்தனை ஜாதி அமைப்புகளையும் ஒன்றுதிரட்டினார்.

சமூக ஜனநாயக கூட்டணி
ஜாதிய அமைப்புகளை ஒன்றுதிரட்டிய கையோடு சமூக ஜனநாயகக் கூட்டணியையும் உருவாக்கினார். இந்த கூட்டணி சார்பில் தான் தேர்தலை எதிர்கொள்வோம் என்று கூறி பாமக வேட்பாளர்களையும் அறிவித்தார்.

பாஜகவுடன் அன்புமணி
ஆனால் எப்படியும் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.. அந்த கூட்டணியில் இடம்பெற்றால் அமைச்சர் பதவி வாங்கிவிடுவது என்ற கங்கணத்துடன் அவரது மகன் அன்புமணி வியூகம் வகுத்து கடுமையாக விமர்சனங்களுக்கு இடையேயும் தொகுதி விட்டுக் கொடுப்புகளுடனும் பாஜக அணியில் இடம்பிடித்துவிட்டார்.

சிங்கம், சிறுநரி பேச்சு
அன்புமணியின் இந்த முயற்சியை தொடக்கம் முதலே மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமதாஸ். இதன் உச்சமாகத்தான் சிங்கம் சிறுநரிகளிடம் பிச்சை கேட்பதா? என்று விஜயகாந்தை தருமபுரியில் வைத்து விமர்சித்தார். ஆனால் ராமதாஸ் நினைத்த எதுவுமே நடக்காமல் போனதால் கடும் விரக்தியில் இருக்கிறாராம்.

தேமுதிகவுடன் கூட்டணியா?
அதுவும் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டோவுக்கு அன்புமணி போஸ் கொடுத்ததை இன்னமும் ஏற்க முடியாதவராக இருக்கிறாராம் ராமதாஸ்.

பிரசாரத்துக்கு வரலை..
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு கூட செல்ல வேண்டாம் என்ற முடிவில் இருந்தவர் திடீரென பயணத்துக்கு தயாரானாராம். ஆனாலும் அவரது கோபமும் ஆத்திரமும் அடங்காததால் இன்னமும் அவரது சுற்றுப் பயண விவரம் அறிவிக்கப்படவில்லை.

குடும்பத்தினர் மீது கோபம்
அன்புமணியிடமும் மட்டுமல்ல மகள் கவிதாவிடமும் மனைவி சரஸ்வதியிடமும் கடும் கோபத்தைத்தான் இன்னமும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் ராமதாஸ். சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிரத்னத்தைக் கூட்டிக் கொண்டு வந்து பாமக வேட்பாளரை அறிவிப்பது குறித்தும் கூட எல்லாவற்றையும் காடுவெட்டி குருவிடம் கேட்டுக்குங்க என்று ஒற்றைவரியில் சொன்னாராம் ராமதாஸ்.

கதிகலங்கும் பாமகவினர்
அவரது இந்த கோபமும் பிடிவாதமும் தொடர எங்கே ராமதாஸ் பிரசாரத்துக்கு வராமல் போய்விடுவாரோ என கதிகலங்கிக் கிடக்கின்றனர் பாமகவினர்..












Click it and Unblock the Notifications