ராமஜெயம் கொலை.. 2வது நாளாக தீவிர உண்மை கண்டறியும் சோதனை.. குற்றவாளிகள் விரைவில் கைது?
சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, அவரின் உதவியாளரிடம் இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம்தேதி ராமஜெயம் நடைபயிற்சி சென்ற போது ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதே வேளை அவர் முதல் நாள் இரவே கடத்தப்பட்டதாகவும் சர்ச்சை தகவல் எழுந்தது.
ராமஜெயம் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த கெடுவைத் தொடர்ந்து, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார். அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பதால் கடைசி கட்ட முயற்சியாக, சந்தேகப்படும் நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் ராமஜெயம் அலுவலகத்தில் பணியாற்றிய அவரது உதவியாளர்கள் திருச்சியைச் சேர்ந்த கேபிள் மோகன் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக சில தகவல்களைக் கூறியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து இருவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர். அங்குள்ள சாஸ்திரி பவனில் இந்த சோதனையுடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டது.
5 மணிநேரம் சோதனை
கேபிள் மோகனிடம் இன்றும் 2 ஆவது நாளாக உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. ராமஜெயம் பகையைச் சம்பாதித்துக் கொண்ட நபர்கள் குறித்தும், ராமஜெயத்தின் தினசரி நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. கேபிள் மோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் நந்தகுமாரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
திருச்செங்கோடு நந்தக்குமார்
திருச்செங்கோட்டை சேர்ந்த நந்தகுமார் திருச்சி, தில்லைநகர் 2 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ராமஜெயத்தின் அலுவலகத்தில் தங்கி இருந்து, அவரது தொழில் தொடர்பான விஷயங்களைக் கவனித்து வந்தார். குவாரி தொழில், கிரானைட் தொழில் உள்ளிட்ட வேலைகளில் ராமஜெயத்திற்கு உதவியாக அவர் இருந்து வந்தார்.
நீதிமன்றத்தில் அறிக்கை
குவாரி பிரச்னை தொடர்பாக ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால், நந்தகுமாரிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவரது பதில்கள் முரணாக இருந்ததால், தற்போது அவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
சண்முகத்திடமும் சோதனை
திருப்தியான தகவல் கிடைக்கும் வரை தொடர்ந்து 2 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. புதன்கிழமைக்குள் முடிந்து விட்டால் அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படியும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் அடிப்படையிலும் விசாரிக்க உள்ளோம். மேலும் சண்முகத்திடமும் விரைவில் நீதிமன்ற அனுமதியின்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறியுள்ளனர்.
முக்கிய பிரமுகர்கள்
இதேபோல மேலும் பலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் பெயர்களும் உள்ளன. இவர்களிடம் பேரிடம் இருந்தும் பெறப்படும் தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார், விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளனர்.
விரைவில் கைது?
மதுரை உயர்நீதிமன்ற கெடு முடிய இன்னும் 30 நாட்களே உள்ளதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் விரைவில் ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் பிடிபடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும் வழக்கின் மர்மம் விரைவில் விலகும் என்றும் கூறப்படுகிறது.