ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை.. கழுத்தை அறுத்தது போலீசுடன் வந்த நபர்கள்: வக்கீல் பரபரப்பு தகவல்
சென்னை: சுவாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தனது ஜாமீன் மனுவில் கூறியுள்ளார். அதேநேரம், ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் அவரது கழுத்தை அறுத்தது போலீசாருடன் வந்த நபர்கள் என்றும் அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ராம்குமாருக்கு வரும் 18ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், உண்மை குற்றவாளியை காப்பாற்ற என்மீது பழி போடப்பட்டுள்ளது. எனக்கும் சுவாதி கொலைக்கும் தொடர்பு இல்லை. இவ்வாறு ஜாமீன் மனுவில் ராம்குமார் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாறுபட்ட தகவல்
சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலம் என்று கூறி, ஊடகங்களுக்கு செய்திகளை பரப்பி வந்தது காவல்துறை. இந்நிலையில், ராம்குமார் தனது மனுவில் இவ்வாறு கூறியுள்ளார்.
வக்கீல் பேட்டி
இதனிடையே, ராம்குமார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், "சுவாதி கொலை நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பே சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். அதுகுறித்து விசாரித்து உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும்.
நெருக்கடி
2 நாட்களுக்குள் வழக்கை முடிக்க கோர்ட் வலியுறுத்தியதால், ராம்குமாரை இந்த வழக்கின் பலிகடாவாக போலீசார் மாற்றியுள்ளனர். அவர் மீது தவறு இல்லை.
கழுத்தை அறுத்தனர்
போலீசார் கைது செய்யபோனபோது, ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியது பொய். ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை. போலீசாருடன் சென்ற நபர்கள்தான், ராம்குமாரின் கழுத்தை அறுத்து தற்கொலை நாடகம் நடத்தியுள்ளனர். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேட்டியளித்தார்.
போட்டோ வெளியானது
ராம்குமார் தற்கொலைக்கு முயன்றபோது கழுத்தை அறுத்து கொண்டதாக போலீசார் கூறிய சில மணி நேரங்களில், அவர் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்ததை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் உலவவிடப்பட்டன. கழுத்தை அறுக்கும்போது போலீசார் ஏன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல் இல்லை
இதனிடையே, ராம்குமாரின் ஒப்புதல் இல்லாமலேயே ராம்குமார் சார்பில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்று தெரியவந்துள்ளது. ராம்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என யாருடைய ஒப்புதலும் இல்லாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் கிருஷ்ண மூர்த்தி என்பதால் ராம்குமாரின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.