டி.டி.மருத்துவக்கல்லூரியை ஏற்று நடத்த தயார்: ஹைகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: டிடி மருத்துவக் கல்லூரியை ஏற்று நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த கல்லூரியில் 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரிக்கு தங்களை மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் சுகாதார துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், டிடி மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய முடியாது. இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட அளவு மாணவர்களைத்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியும்.
மேலும் இந்த கல்லூரி நிர்வாகம், முதலாண்டுக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் அனைத்து இடங்களையும் தாமாகவே நிரப்பி விட்டது. இந்த கல்லூரி அரசு கட்டுப்பாட்டில் வரவில்லை. ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவர்களை ஏமாற்றிய கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு மருத்துவ கவுன்சில் சிபாரிசு செய்துள்ளது என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, டிடி மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று நடத்த தயாராக இருப்பதாகவும், கல்லூரியை ஏற்று நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தேதியை குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications