விஜயகாந்த்துக்கு சீட் கொடுத்த தேமுதிக பிரேமலதா, சுதீஷுக்கு ஏன் கொடுக்கலை?
சென்னை: மக்கள் நல கூட்டணியின் பிரசார பீரங்கியும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியுமான பிரேமலதாவுக்கும், விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷுக்கும் அக்கட்சி சார்பில் போட்டியிட சீட் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது விஜயகாந்த்தின் தேமுதிக. இக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தேமுதிக தனது இறுதி வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியம்
104 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை என்பது தேமுதிகவினரை மட்டுமின்றி, பிற கட்சியினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
திமுகவில் சகஜம்
திமுகவை பொறுத்தளவில் அதன் தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் போட்டியிடுகிறார்கள். இதேபோல பல முன்னணி தலைவர்களின் வாரிசுகளும் களத்தில் நிற்கிறார்கள். தந்தையும், மகனும் பக்கத்து, தொகுதிகளில் போட்டியிடும் நிலையும் கூட திமுகவில் உள்ளது.
தேமுதிகவில் மிஸ்சிங்
ஆனால், முக்கியமான இந்த தேர்தலில் தேமுதிக தனது நம்பிக்கைக்கு பாத்திரமான பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் வாய்ப்பு தராதது ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேமுதிக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் சில காரணங்களை கூறினார்.
பிரசார பீரங்கி
தேமுதிகவை பொறுத்தளவில் விஜயகாந்த் சில உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுவதால், மேடையில் சரளமாக, புரியும்படி பேச முடிவதில்லை. எனவே பிரேமலதாதான் கட்சியின் பிரசார பீரங்கியாக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுதீஷும் பேசி வருகிறார்.
சுதீஷுக்கு வேறு பணி
அதிலும், பிரேமலதா பிரசாரத்தில் கவனம் செலுத்தினால், கூட்டணி கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை சுதீஷ் செய்து வருகிறார். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் இவ்விருவரும் பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
ஒரே தொகுதியில் கவனம்
இந்த சூழ்நிலையில், பிரேமலதாவும், சுதீஷும் தேர்தலில் போட்டியிட்டால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி பிரசாரம் செய்ய வேண்டிவரும். இவ்விருவரையும் வீழ்த்த திமுக மற்றும் அதிமுக வலுவான பிரசாரம் மேற்கொள்ளும் என்பதால் தங்கள் தொகுதியிலேயே இருந்து பதிலடி தர வேண்டிய நிலைக்கு இருவரும் தள்ளப்படுவார்கள்.
மறுத்தனர்
தங்கள் தொகுதியை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் தேமுதிகவின் வெற்றி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் சுதீஷும், பிரேமலதாவும் தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துவிட்டனர். எனவேதான், தங்களுக்கு எந்த தொகுதியும் வேண்டாம் என்று அவர்கள் கூறிவிட்டனர். இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.
குடும்ப கட்சி விமர்சனம்
மேலும், திமுகவை குடும்ப கட்சி என்று பிரேமலதா விமர்சனம் செய்து ஆக்ரோஷமாக மேடைதோறும் பேசிவரும் நிலையில், தேமுதிகவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடுவது தங்களுக்கு எதிராக, விமர்சனங்களை திருப்பிவிடும் என்ற அச்சமும் பிரேமலதா, சுதீஷின் முடிவுக்கு காரணம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
லோக்சபா தேர்தலில் போட்டி
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது சேலம் தொகுதியில் சுதீஷ் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.