தூத்துக்குடி: வெளி நாட்டுக்கு கடத்த இருந்த 2 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக சவுதிக்கு கடத்த இருந்த 2 டன் செம்மர கட்டைகளை சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒரு கண்டெய்னரில் நூல்கண்டுகள் வந்துள்ளன. இந்த கன்டெய்னருக்கு மதுரையிலுள்ள குட்வில் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் மூலம் மத்திய கலால் வரித்துறையினரிடம் சான்று பெற்றதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
தூத்துக்குடியில் கன்டெய்னர் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்த சுங்க துறையினர் அதில் வைக்கப்பட்டிருந்த கலால் வரித்துறை சீல் மற்றும் அதிகாரிகள் கையெழுத்து ஆகியவை போலியாக இருப்பதை பார்த்தனர். இதையடுத்து துறைமுகத்திற்கு செல்லும் வழியில் அந்த கன்டெய்னரை சுங்கத்துறை புலனாய்வு பிரிவு கூடுதல் கமிஷனர் குமரேஷ் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர்.
அதில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நூல் கண்டுகளுக்கு பதிலாக அந்த கண்டெய்னரில் சிமெண்ட் மூட்டைகளுக்கு மத்தியில் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட செம்மர கட்டைகள் மறைத்து கடத்த முயன்றது தெரிய வந்தது.
கன்டெய்னரில் இருந்த 2100 கிலோ செம்மரகட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.21 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் இருந்த 7 டன் சிமெண்ட் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் செம்மர கடத்தலில் ஈடுபட்ட நிறுவனம் மற்றும் நபர்கள் குறித்து சுங்க துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.