கனமழையால் வீடு, விவசாய நிலங்கள் பாதிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்.. செந்தில் பாலாஜி உறுதி!
மயிலாடுதுறை: கனமழையால் பாதிக்கப்பட்ட வீடு, விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நவ.9ம் தேதிக்கு பின் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
அதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத அளவிற்கு அதீத கனமழை காரணமாக சீர்காழி நகர் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களும் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி தவித்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பு.. சென்னை ஏரி-குளத்தில் 3 அடி நீர் இருப்பை குறைங்க.. கனமழையால் மாநகராட்சி புது அறிவுரை
செந்தில் பாலாஜி ஆய்வு
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது. 36 தற்காலிக நிவாரண முகாம்களில் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மணி கிராம பகுதியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மின் விநியோகம் சீரமைப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், சீர்காழி உள்ளிட்ட நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் இன்று இரவுக்குள் மின் விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும். சேதமடைந்த மின்மாற்றிகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
3 ஆயிரம் மரக்கிளை அகற்றம்
தொடர்ந்து மின்துறையில் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, 50 ஆயிரம் பணியிடங்கள் மின் வாரியத்தில் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு நிதித் துறையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன் பணிகள் தொடங்கும். இந்த மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 400 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 600 சாய்ந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
புகார்கள் அளிக்கலாம்
மின் மாற்றிகளை மாற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் எந்த வித பணமும் வசூலிப்பது இல்லை. எந்த புகாராக இருந்தாலும் மின்னகம் மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். பணி செய்யாத மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்று காலை 6 மணிக்கு எங்களை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவித்தார்.
நிவாரணம் வழங்கப்படும்
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கும் பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட வீடு, விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்படும். அதேபோல் பாதிக்கப்பட்ட மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.