குளு குளு குற்றாலத்தில் விறுவிறு ஆக்கிரமிப்பு அகற்றம்... குளிக்க வந்தோர் குதூகலம்!
குற்றாலம்: குற்றாலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் சீசனை அனுபவிக்க வந்தோர் பெரும் உற்சாகமும், சந்தோஷமும் அடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து செல்லும் சுற்றுலா நகர்தான் குற்றாலம். ஆனால், இங்கு அதிகரித்து வந்த ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் சவால் உருவெடுத்தது. விபத்துகளும் அதிகரித்தன.
சமீபத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து குற்றாலத்தில் பல்வேறு சீர்திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆக்கிரமிப்பு அகற்றமும் அடங்கும். நெடுஞ்சாலைத் துறையினர் தென்காசி யானைப்பாலம் பகுதியிலிருந்து ஐந்தருவி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு சில பகுதிகளில் வியாபாரிகள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். தென்காசி முதல் குற்றாலம் வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால் தற்போது தென்காசி முதல் குற்றாலம் வரையுள்ள சாலை விரிந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு சுலபமாகியுள்ளது. சாலை விசாலமாகியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
களை கட்டிய சீசன்
இதற்கிடையே தற்போது பருவ மழை மீண்டும் வலுப் பெற்றுள்ளதால் குற்றாலம் அருவிகளில் நீர் கொட்டுகிறது. இதனால் சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது. கடந்த 3 தினங்களாக சாரல் மழை நன்றாக பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் கொட்டிவருகிறது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர்கொட்டுவதால் மெயின் அருவியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றாலஅருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.