நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே கைவரிசை- ரூ4.12 லட்சம் கொள்ளை!!
திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4.12 லட்சம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகரில் திருட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. ஜனவரியில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே கொள்ளை நடந்திருப்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. அதில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும் ஒன்று. இந்நிலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் அங்கு இணை சார்பதிவாளர் அலுவலகத்தை அடுத்துள்ள வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே இருந்த இரும்பு பெட்டி திறக்கப்பட்டு அதற்குள் வைக்கப்பட்டிருந்த 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 ரூபாய் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளை குற்றப்பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் வந்து சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
அலுவலகத்தில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு சேதம் எதுவும் இல்லை. அதேபோல் வைப்பறையின் கதவுகளும் உடைக்கப்படவில்லை. ஆனால் பீரோவும், இரும்புப் பெட்டியும் உடைக்கப்பட்டுள்ளது.
மோப்பநாய் பீரோவை மோப்பம் பிடித்து விட்டு பதிவாளர் அலுவலகத்தில் உள்ள மாடியில் ஏறியது. பின் அங்கிருந்து அலுவலக பின் பகுதிக்கு சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட வருவாய் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இரவும், பகலும் காவலர்கள் உண்டு. மேலும் அருகில் உள்ள கருவூலத்திலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். அப்படி இருந்தும் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை போயிருப்பது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.