இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டினால் ரூ.40 கோடி அபராதம்: இலங்கையின் மிரட்டலுக்கு பொன்.ராதா பதிலடி
சென்னை: இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் ரூ.40 கோடி அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.15 கோடி ரூபாய் அபராதமாக விதிப்பது பற்றி அந்த நாட்டு அரசு தீவிரமாக பரிசீலித்து வரும் நிலையில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிறன்று மாலையில் 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அடுத்த ஓரிரு தினங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றனர். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு இதுவரையில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர் இலங்கை அதிபருடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கை மீன்வள துறை அதிகாரி ஒருவர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் அவர்கள் கைது செய்யப்படுவதோடு ரூ.15 கோடி அபராதம் விதிப்போம் என்று கூறியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இலங்கை அதிகாரி அவ்வாறு கூறியிருந்தால் அது சரியானது கிடையாது. ரூ.15 கோடி அபராதம் விதிப்பார்களேயானால், இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும்போது அவர்களை கைது செய்து, நாம் ரூ. 40 கோடி அபராதம் விதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதே போல் மாறி, மாறி அபராதம் விதித்துக்கொண்டிருப்பது பிரச்னைக்கு தீர்வு ஆகாது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.
முன்னதாக இலங்கை மீன்வளத்துறை டைரக்டர் ஜெனரல் எம்.சி.எல்.பெர்னாண்டோ, செய்தியாளர்களிடம் பேசும் போது, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடிக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை மீன் வளத்துறை சட்டத்தில் வகை செய்யப்படவில்லை. எனவே, இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு கோடிக்கணக்கான தொகையை அபராதம் விதிக்கும் வகையில் மீன்வளத்துறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
இதற்கான சட்ட திருத்த மசோதாவை தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க தனியாக ஆலோசனை குழு ஒன்றையும் அரசு அமைத்து உள்ளது.
இதேபோல் உரிய அனுமதி இன்றி வெளிநாட்டு கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்து உள்ளது என்று பெர்னாண்டோ கூறியதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.