கிரானைட் கொள்ளை: ஒத்துழைக்காத அதிகாரிகள்! அசராத சகாயம்!!
மதுரை: கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க வந்த சட்ட ஆணையர் சகாயத்திற்கு ரயில் டிக்கெட் தொடங்கி, அறையில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்தியது வரைக்கும் சங்கடங்களை அளித்துள்ளனர் அதிகாரிகள்.
சகாயத்திற்கு உதவிக்காக அரசு நியமித்த அதிகாரிகள் உதவி செய்ததை விட உபத்திரவம் செய்ததுதான் அதிகம் என்கின்றனர். ரயிலில் வரவேண்டிய சகாயம் குழுவினர், கார் மூலம் மதுரைக்கு 3ம் தேதி வந்தனர். அவருடன் சென்னையில் அறிவியல் துணை நகரத்தில் பணியாற்றும் ஹேமா, தேவசேனாதிபதி ஆகிய 2 பேரை சகாயம் அழைத்து வந்தார்.
மதுரையில் விசாரணையை தொடங்கிய சகாயத்தை சுதந்திர போராட்ட தியாகிகள் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இது இன்னொரு சுதந்திர போராட்டம் என்றும் குறிப்பிட்டனர்.
ஒட்டு கேட்டார்களா?
சகாயம் உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவரது அறையிலும் அவருடன் வந்த உதவியாளர்கள் தேவசேனாதிபதி மற்றும் ஹேமாவின் அறைகளிலும் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து முதல் தளத்தில் 11-ம் நம்பர் அறையை காலி செய்துவிட்டு, கீழ்த்தளத்தில் உள்ள அறை ஒன்றுக்கு சகாயம் மாறினார். ஆனால் அதற்கும் இடைஞ்சல் செய்தனர் அதிகாரிகள்.
அமைச்சர் வரார்
அமைச்சர் செல்லூர் ராஜூ வந்து கொண்டிருக்கிறார், அவர் இங்கு தான் தங்குவார், எனவே நீங்கள் அறையை காலி செய்து விடுங்கள்' என்று சகாயத்திடம் பொதுப்பணித் துறையினர் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சகாயமோ என்னால் அடிக்கடி ரூமை மாற்ற முடியாது' நான் வெளியில் தங்கப் போகிறேன் என்று கூறவே அமைதியானார்கள் அதிகாரிகள்.
11 பேர் உதவிக்கு
இரண்டு கனிமவள உதவி இயக்குநர்கள், இரண்டு ஜியாலாஜிஸ்ட்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், ஸ்டெனோ என்று 11 பேரை மதுரை மாவட்ட நிர்வாகம் உதவிக்கு அனுப்பியது என்னவோ உண்மைதான் ஆனால் அவர்கள் செய்த உபத்திரவமோ சொல்லி மாளாது என்கின்றனர் உடனிருந்தவர்கள்.
109 மனுக்கள்
கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் மதுரையில் தங்கியிருந்து விசாரணை நடத்திய சகாயம் குழுவினர் பொதுமக்களிடம் 109 மனுக்களை பெற்றுள்ளனர்.
போலீசார் கொடுத்த புகார்
மூன்று நாளும் சகாயத்தை பார்த்து மனு கொடுக்க சாரை சாரையாக வந்துள்ளனர் கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள். அவர்களுடன் சகாயத்திற்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனும் ஏட்டு மனோகரனும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று சகாயத்திடம் புகார் மனுக்களை அளித்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை வட்டாரத்திலும் இந்த செய்தி பரவவே, அவர்கள் இருவரிடமும் போலீஸ் உயரதிகாரிகள் செல்போனில் தொடர்புகொண்டு திட்டினார்களாம்.
குவிந்த புகார்கள்
இரண்டு பேரின் புகார்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மற்ற போலீஸ்காரர்கள் தங்களது மனைவி மூலமாகப் புகார் மனுக்களை கொடுத்து அனுப்பினார்களாம். இந்த போலீசாரின் இடங்களையும் பிஆர்பி கும்பல் ஆக்கிரமித்துவிட்டதாம்.
2000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கபலீகரம்
மேலூர் பகுதிகளில் உள்ள பஞ்சமி நிலங்களின் சர்வே எண், அதன் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்கள் ஆகியவை சம்பந்தமாக 600 பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை சகாயத்திடம் விவசாயிகள் அளித்தனர். இதில் மேலூர் தெற்குத் தெருவில் பி.ஆர்.பிக்கு சொந்தமான கிரானைட் தொழிற்சாலையில் பாதி இடம் பஞ்சமி நிலங்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலூரில் சுமார் 2,000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கிரானைட் முதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிலத்தில்
திருமோகூர் பகுதிகளில் கோயில் இடம், பட்டா இடம் என எந்த வித்தியாசமும் இன்றி 100 அடி ஆழத்துக்கு கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் புகார் தந்துள்ளனர்.
தடுமாறிய தட்டச்சர்
கிரானைட் முறைகேடுகள் குறித்து மற்ற மாவட்ட புகார் மனுக்கள் குறித்து பட்டியலை டைப் செய்து தருமாறு தட்டச்சர் விஜயாவிடம் சகாயம் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ பட்டியலை தயார் செய்யாமலேயே தட்டி கழித்துவிட்டாராம். காரணம் கேட்டதற்கு என் கையை கட்டிப் போட்டிருக்காங்க சார் என்று அழுதாராம் தட்டச்சர்.
படம் பிடித்த வீடியோ கிராபர்
அதைவிட பெரிய கொடுமை யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை படம் பிடித்துள்ளார் வீடியோ கிராபர். அதைகேட்ட சகாயத்திடம் இது கலெக்டர் உத்தரவு என்று கூறி அதிர வைத்தராம்.
8 பேர் நீக்கம்
சகாயத்துக்கு உதவுவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் உட்பட எட்டு பேர், சகாயம் வந்திருந்த மூன்று நாட்களும் எந்த வேலையும் செய்யவில்லையாம். இதனால் கடுப்பான சகாயம், தனது குழுவில் இருந்த கனிமவள உதவி இயக்குநர்கள் உள்பட 8 பேரை நீக்கி அரசுப் பணிக்கு திருப்பி அனுப்பி அதிரவைத்து விட்டார் என்கின்றனர்.
இனி என்னென்ன நடக்குமோ?
விசாரணைக்கு வந்த போதே இத்தனை வில்லங்கங்களை செய்த அதிகாரிகள், சகாயத்திற்கு இன்னும் என்னென்ன சிக்கல்களை செய்ய காத்திருக்கின்றனரோ? தெரியவில்லை. ஆனாலும் அசராமல் சகாயம் ஆய்வு குழு ஆதரவு இயக்கத்தினர் கிராமம் கிராமமாக சென்று கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மறுப்பு
வாகன பேரணி நடந்தால் ஒலி மாசு மற்றும் புகை மாசு ஏற்படும் என இந்த வாகன பேரணிக்கு மதுரை மாவட்ட காவல்துறை அனுமதியை எழுத்துபூர்வமாக மறுத்துவிட்டதையும் மீறி 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் மற்றும் ஆட்டோக்களில் 50க்கும் மேற்பட்ட ஆதரவு குழுவினர் பிரச்சாரம் செய்தனர்.
அதாவது நாட்டின் வளத்தை கொள்ளையடித்தது தப்பில்லையாம், இந்த தவறுகளை சுட்டிக் காட்டி வாகன பேரணி நடத்தினால் தப்பாம்....
நீதிமன்றங்கள் தாங்களாகவே இதில் தலையிட்டு அதிகார வர்க்கத்துக்கு சாட்டையடி தந்தால் தான் நிலைமை மாறும்....