மன்னிச்சிக்குங்க, என்னால தேமுதிகவுக்காக வேலை பார்க்க முடியாது.. சேலம் அருள் அதிரடி!
சேலம்: சேலம் தொகுதியை பாமக கைவிட்டு விட்ட நிலையில் அத்தொகுதி வேட்பாளராக டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப்பட்டு, அதை திரும்பத் திரும்ப உறுதியும் செய்து, வேட்பாளர் அருள்தான் என்று திட்டவட்டமாகவும் அறிவித்த நிலையில் தற்போது அங்கு தேமுதிக போட்டியிடுகிறது. இருந்தாலும், தான் தேமுதிகவுக்காக வேலை பார்க்கப் போவதில்லை என்று அருள் தெளிவாகக் கூறி விட்டார்.
அதேசமயம், தான் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ள அருள், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்காக தேர்தல் பணியாற்றப் போவதாகவும் கூறியுள்ளார்.
அருள் சீட்டைப் பறித்து தேமுதிகவிடம் கொடுத்துள்ளதால் சேலம் பாமகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் தேமுதிகவுக்கு எதிராக செயல்படக் காத்திருப்பதால் தேமுதிக தோற்கப் போகும் தொகுதிகளில் சேலம் இப்போதே சேர்ந்து விட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அருள் நீதான் வேட்பாளர்.. தைரியமாக போ
இந்த வார்த்தையை, தர்மபுரியில் டாக்டர் அன்புமணியை வேட்பாளராக அறிவித்து டாக்டர் ராமதாஸ் கூறியபோது அருள் முகத்தில் அத்தனை பிரகாசம்.
சிங்கம் பிச்சை எடுக்காது
அத்தோடு நில்லாத டாக்டர் ராமதாஸ், சிங்கம் சிறு நரியிடம் பிச்சை எடுக்காது என்று மேலும் வேகமாக கூற, அருளுக்கு வந்துத பாருங்கள் அப்படி, ஒரு தெம்பும், நம்பிக்கையும், தைரியமும்.
ஆனால் இன்று...
ஆனால் இன்று அருள் சோர்ந்து போயுள்ளார். அவரது ஆதரவாளர்கள் இடிந்து போயுள்ளனர். இழவு விழுந்த வீடாக இருக்கிறது சேலம் பாமக.
5 மாத உழைப்பு வீணாகி விட்டதே
5 மாதங்களுக்கு முன்பே அருள்தான் பாமகவின் சேலம் வேட்பாளர் என்று ராமதாஸ் கூறி விட்டார். இதனால் தொகுதியிலேயே பழியாகக் கிடந்த அருள் வீடு வீடாகப் போய், கிராமம் கிராமமாகப் போய் ஆதரவு திரட்டி வந்தார். முழு நேரமும் தொகுதியையே சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால் இபபோது எல்லாம் வீணாகி விட்டதே என்ற பெரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளார் அருள்.
சின்னய்யா இப்படிச் செய்யலாமா
அருள் ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ஓய்வெடுக்காமல் ஆதரவு திரட்டி வந்த அவரை ஏமாற்றி விட்டனர். ஆசை காட்டி மோசம் செய்து விட்டனர் என்று அவர்கள் குமுறுகிறார்கள். அவர்களது வருத்தமெல்லாம் ராமதாஸை விட அன்புமணி மீதுதான் அதிகம் உள்ளது.
தனியா நின்னாவே ஜெயிச்சிருக்கலாமே
இங்கு தனியாக நின்றிருந்தால் கூட பாமக பிரமாதமான வெற்றியைப் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு இங்கு அருளுக்கு நல்ல ஆதரவு உள்ளது. மக்கள் அவருக்கு ஆதரவாகவே உள்ளனர். வன்னியர் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைத்திருக்கும். ஆனால் எல்லாவற்றையும் வீணாக்கி விட்டனர்.
அன்புமணிக்கு பதவிதான் பெரிதா
அன்புமணி ராமதாஸுக்கு கட்சியை விட தனது பதவிதான் முக்கியமாகப் போய் விட்டது. இது வருத்தம் தருகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சுயேச்சையாக நில்லுங்கள்
தற்போது அருளை சுயேச்சையாக நிற்கச் சொல்லி வருகிறார்களாம் அவரது ஆதரவாளர்கள். அவர் பதில் ஏதும் சொல்லவில்லையாம். அதேசமயம், கட்சியை விட்டு வெளியேறும் மன நிலையில் அவர் இல்லை என்கிறார்கள்.
அன்புமணிக்காக வேலை பார்க்க ஆயத்தம்
மேலும் அமைதியாக தர்மபுரி போய் அன்புமணியின் வெற்றிக்காக இதுவரை உழைத்ததை விட பல மடங்கு அதிகமாக உழைக்கப் போவதாகவும் கூறுகிறார்கள். இதைப் பார்த்தாவது டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் உண்மையான தொண்டர்களைப் புரிந்து கொள்ளட்டும் என்றும் அருளுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
இங்கு மட்டுமல்ல
சேலத்தில் மட்டுமல்ல, பாமக எதிர்பார்த்துக் காத்திருந்து, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் போன தொகுதிகளில் எல்லாமும் கூட பாமகவினர் வாக்கு முழுமையாக தோழமைக் கட்சியினருக்குக் கிடைக்காது என்கிறார்கள்.