மறுபடியும் மாட்டிக் கொண்ட ‘அம்மா ஆணைக்கிணங்க’ புகழ் சேலம் கலெக்டர்... நிருபரைத் தாக்கினார்!
சேலம்: பத்திரிகையாளரைத் தாக்கி அவரது செல்போனை பிடுங்கிச் சென்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சேலம் கலெக்டர் சம்பத்.
கடந்தாண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது, அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்ததாக பேட்டியளித்து மக்களுக்கு ஷாக் கொடுத்தவர் தான் சேலம் கலெக்டர்.
அதனைத் தொடர்ந்து, ‘அப்படியானால் அம்மாவின் உத்தரவு நகல்களைக் காட்டுங்கள்' என மக்கள் அனுப்பும் மனுக்களுக்கு கலெக்டர் அலுவலக ஊழியர்களும் சின்சியராக பதில் அனுப்பி வருகின்றனர்.
அந்தப் பேட்டியைத் தொடர்ந்து தனது அறையில் புதிய கட்டில், மெத்தை என வாங்கிப் போட்டு, அதிகாரத்தை மீறிச் செயல்படுவதாக சர்ச்சையில் சிக்கினார்.
இது மட்டுமின்றி தனது கடமையைச் சரிவரச் செய்வதில்லை, தனது அலுவலக அறைக்கு செருப்புக் காலோடு வரக்கூடாது எனக் கட்டுப்பாடு, தன் பயன்பாட்டிற்கு மட்டும் ஏகப்பட்ட ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் என தொடர்ந்து அவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை நகராட்சி ஆணையாளர் ராமகிருஷ்ணனை அழைத்துக் கொண்டு, ஆத்தூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் இறுதிச்சுற்றுப் படம் பார்க்கச் சென்றுள்ளார். படம் முடியும் வேளையில் காலைக்கதிர் நாளிதளின் செய்தியாளர் தமிழ்ச்செல்வன், தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டுள்ளார் சம்பத்.
அப்போது, "இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை... எங்கே போனாலும் பின்னாலேயே வாரானுங்க, சும்மா விடக்கூடாது" எனச் சொல்லியபடி தமிழ்ச்செல்வனின் செல்போனை கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
ஆனால், அவர் தர மறுக்கவே, தமிழ்ச்செல்வனின் தலையில் அடித்து அவரை கீழே தள்ளிவிட்டு செல்போனை பிடுங்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் வண்டியில் ஏறி அவர் புறப்பட்டுச் சென்றுவிட, அதற்குள் தகவல் அறிந்து மற்ற செய்தியாளர்கள் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் கலெக்டரின் வண்டியைத் துரத்திச் சென்று அவர்கள் விசாரித்த போது, செல்போனை தியேட்டரிலேயே கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தியேட்டரில் விசாரித்தபோது அவ்வாறு யாரிடமும் செல்போன் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதற்கிடையே தலையில் அடிபட்ட தமிழ்ச்செல்வன் இப்போது ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவம் தொடர்பாக போலீசிலும் அவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இன்று காலை, தியேட்டர் உரிமையாளர் கிருஷ்ணன், தன்னுடைய தியேட்டர் வாசலில் நின்றுகொண்டு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் தகராறு செய்ததாக தமிழ்ச்செல்வன் மீது புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு அராஜகமாக நடந்து கொண்டு செய்தியாளரைத் தாக்கியது, அவரது செல்போனை பிடுங்கிச் சென்றது மட்டுமின்றி, அவர் மீது பொய்ப்புகாரும் கொடுத்துள்ளதாக சேலம் கலெக்டர் சம்பத்தைக் கண்டித்து, இன்று காலை, சேலம் மற்றும் ஆத்தூரில் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பட்டங்கள் நடை பெற்றன.