ஆசிரியரே இல்லை...பீஸ் மட்டும் ஒன்றரை லட்சம்- போராட்டத்தில் பாவை வேளாண் கல்லூரி மாணவர்கள்!
சேலம் பாவை வேளாண் கல்லூரியில் போதிய வசதிகளும் ஆசிரியர்களும் இல்லை என்று கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்: சேலம் பாவை பொறியியல் கல்லூரியில் இயங்கிவரும் வேளாண் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் இல்லை என்று கூறி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில், வேளாண் கல்லூரியும் உள்ளது. அதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் அக்கல்லூரியில் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆய்வுக் கூட வசதிகளும் போதிய ஆசிரியர்களும் இல்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சேலம் நாமக்கல் நெடுஞ்சாலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய மாணவர்கள்,''நாங்கள் வருடத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு சரியான ஆய்வுக் கூட வசதிகள் இல்லை. ஆறு பாடங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆசிரியர் மட்டுமே வருகிறார். அந்த ஒரு பாடத்தை மட்டும் படித்தால் போதுமா?
எங்களுக்கு ஆய்வுக் கூடங்கள் அமைத்துதர வேண்டும். எல்லா பாடங்களுக்கும் ஆசிரியர்கள் வேண்டும். இல்லாவிடில் எங்களை அரசுக் கல்லூரிக்கோ அல்லது வேறு தனியார் கல்லூரிக்கோ மாற்ற வேண்டும் என மாணவர்கள் கூறினர்.