சேலத்தில் சஸ்பெண்ட் ஆன வி.ஏ.ஓக்கள் மீண்டும் பணி நியமனம் – 16 நாள் போராட்டம் வாபஸ்
சேலம்: சேலத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓக்களின் சஸ்பெண்ட் உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் வி.ஏ.ஓக்களின் 16 நாட்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பட்டா வழங்குதல் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து சேலம் ஆட்சியர் மகரபூஷணம், உடையாப்பட்டி வி.ஏ.ஓ திருநாவுக்கரசு, மல்லூர் வி.ஏ.ஓ செந்தில்குமார், உதவியாளர் செந்தில் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்தார்.
இவ்வுத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்ட வி.ஏ.ஓக்கள் சங்கம் மாவட்ட அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சேலத்தில் குவிந்த வி.ஏ.ஓக்கள் மொத்தமாக ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனால் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார்.
மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்தின் உத்தரவுக்கு ஏற்ப ஆர்.டி.ஓ லலிதாவதி, திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, அதற்கான உத்தரவு நகலை அவர்களிடம் வழங்கினார்.
உடையாப்பட்டியில் பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மல்லூரில் பணியாற்றி வந்த செந்தில்குமார் சேலம் மேற்கு தாலுகாவில் உள்ள ஜாகீர் அம்மாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரவு நகலை திருநாவுக்கரசு, செந்தில்குமார் ஆகியோர் பெற்று கொண்டனர். ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாலுகா உதவியாளர் செந்தில் மூன்று நாட்களுக்கு முன்பே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு ஓமலூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 16 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவிற்கு வந்தது.